Wednesday, January 16, 2013

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.1621-1796)

3 - போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.1621-1796)

ஆரியச்சக்கரவர்த்திகளின் பின்னர் ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அந்நிய அரசுகளினால் ஆளப்பட்டன. போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் அடிப்படையில் தமிழையும் அதனுடன் இணைந்த சைவத்தையும் எதிர்ப்பவர்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் கருத்துச் சுதந்திரம், அச்சுச் சுதந்திரம் என்பன தமிழருக்கோ அல்லது சைவருக்கோ சுயாதீனமாக இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஆங்கிலேயராட்சியில் ஓரளவு கருத்துச் சுதந்திரமும் பூரண அச்சுச் சுதந்திரமும் வழங்கப்பட்டிருந்தது. அதைவிட ஆங்கிலேயராட்சியில் நவீனத்துவம் சார்பான கருத்துக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.

அரசியல் ரீதியில் போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் வேறுவேறான ஆட்சி செலுத்தியிருப்பினும் இலக்கிய நிலைநின்று, “ஒருங்குசேர வைத்து நோக்கும் போது ஈழத்திலக்கிய வளர்ச்சியின் முக்கிய பண்புகள் சில துலக்கமாகத் தெரிவதைக் காணலாம்.”(1) எனவே போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தினை இணைந்த பகுதியாகவும் அதைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் காலத்தை தனியான பகுதியாகவும் விரிவான முறையில் நோக்குவதே பொருத்தமானதாக அமையும்.

போத்துக்கேயர் அரசு கட்டில் ஏறிய பின்னர் ஈழத்தில் கட்டிறுக்கமான அரசியல்சார் நடவடிக்கைகள் அரங்கேறின. சைவசமயம், இலக்கணம், சுதேச இலக்கியம் போன்றன மறைமுகமான முறையில் கற்பிக்கப்பட்டு வந்தன. தமிழர்கள் பலர் சலுகைகளுக்காகவும் உயர் தொழில்களுக்காகவும் மதம் மாறினர்.

சுதேச கல்விக்கூடங்கள் ஆரம்ப கல்வியூட்டும் நிறுவனங்களாக மட்டுமே செயற்பட்டமையினால் பாரம்பரிய வழிபாட்டு மரபுகள், கல்வி, சடங்குகள் போன்றன படிப்படியாகத் தடைசெய்யப்பட்டு கிறிஸ்தவ சூழலுக்குள் மக்கள் வலிந்து உள்வாங்கப்பட்டனர். இதேவேளையில் சைவப்பணியை, தமிழ்ப் பணியை தொடர விரும்பிய பலர் தமிழ் நாட்டுக்கு ஒழித்து ஓடினர்.

கல்விக்கூடங்களை அமைத்த போத்துக்கேயர் அவற்றை மதம் மாற்றத்துக்கான ஓர் கருவியாகவும் பயன்படுத்தினர். தமது கல்விக் கூடங்களில் கிறிஸ்தவ கல்வியை மட்டும் புகட்டி, அங்கு கற்றோருக்கு உயர் தொழில் வாய்ப்புக்களை வழங்கினர். கிறிஸ்தவ இலக்கியங்களுக்கு முன்னுரிமை அளித்தனர். ஆரியச்சக்கரவர்த்திகள் காலம் போன்று அறிவியல் சார்பான நூல்கள் அதிகம் தோன்றாமைக்கு இதுவும் ஓர் காரணமாக அமைந்தது.

போத்துக்கேயர் கால நிலைமை இவ்வாறிருக்க ஒல்லாந்தர் காலத்தில் நிலவிய ஆட்சியில் ஓரளவு நெகிழ்வுத் தன்மை விளங்கியது. வடபகுதியில் ஒல்லாந்தரால் முன்வைக்கப்பட்ட ‘தேசவழமைச் சட்டம்’(2) கிழக்கில் முன்வைக்கப்பட்ட ‘முக்குகச் சட்டம்’(3) என்பன காரணமாக சுதேச மக்கள் தமது சமூக, பண்பாட்டு அம்சங்களைப் பேண ஓரளவு வழிகிடைத்தமையானது நெகிழ்வுத் தன்மைக்குக் காரணங்களாக அமைந்தன.

போத்துக்கேயர் காலத்தில் மறுக்கப்பட்டிருந்த மதச்சுதந்திரம், சுதேச மொழிக் கல்வி என்பன ஒல்லாந்தர் காலத்தில் ஓரளவு தளர்த்தப்பட்டமையினால் இக்காலத்தில் இந்துசமயம் சார்பான சிற்றிலக்கியங்கள் பல தோன்றவும் வழியேற்பட்டது.

3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேயர் காலத்தில் எழுந்த நூல்கள் இரண்டு என்றும் மூன்று என்றும் கருத்துக்கள் நிலவுகின்ற இக்கால கட்டத்தில் இனங்காணப்பட்ட இலக்கியங்களான ஞானப்பள்ளு, அர்ச்யாகப்பர் அம்மானை, ஞானானந்த புராணம் ஆகிய மூன்றும் கிறிஸ்தவ சார்புடன் காணப்படுகின்றன.

அ. ஞானப்பள்ளு

‘வேதப்பள்ளு’ எனப் பலராலும் அறியப்பட்ட இந்நூல் ஜேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது. யாரால் பாடப்பட்டது எனத் தெரியாது விடினும் அக்காலத்தில் ஜேசு சபையில் அங்கம் வகித்த ‘செபஸ்தியான் பொஸ்கோ சுவாமி’களின் அனுசரனையுடன் இது பாடப்பட்டிருக்கின்றது என்பதற்கும் கி.பி.1650க்கு முன்னரேயே பாடப்பட்டு விட்டது என்பதற்கும் நூலிலேயே அகச் சான்றுகள் காணப்படுகின்றன.

ஆ. அர்ச்யாகப்பர் அம்மானை

ஆரிய வம்சத்தவரான தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியாரால் 1647இல் இந்நூல் பாடப்பட்டது. ‘சந்தியோகு அம்மையார் அம்மானை’ எனவும் இது வழங்கப்பட்டு வருகின்றது. விருத்தப்பாவினால் பாடப்பட்ட இந்த நூலானது அடிநிலை மக்களைக் குறிவைத்துப் பாடப்பட்டது போலத் தெரிகின்றது. இந்து மக்கள் (யாழ்ப்பாணத்தில்) புராணபடனம் செய்வது வழக்கம். இத்தகைய படிப்பு மரபினைப் பின்பற்றி யாழ்.கிளாலியில் கட்டப்பட்ட அர்ச்யாகப்பர் ஆலயத்தில் வருட விழாவின் போது இவ் அம்மானையைப் படித்து வழிபட்டனர்.

இ. ஞானானந்த புராணம்

முன்னர் தரப்பட்ட இரு நூல்களும் இன்றுள்ளன. ஆனால் ஞானானந்த புராணம் இன்றில்லை. இந்நூல் எக்காலத்துக்குரியது என்பதில் பலரிடையேயும் முரண்பாடுகள் உள்ளன எனினும் போத்துக்கேயர் கால நூல் இது என்பதற்கான ஆதாரங்கள் வலுவுடன் உள்ளன. 1104 விருத்தப் பாக்களைக் கொண்டதாக தெல்லிப்பளை ‘தொம்.தியாகு’ முதலியாரின் விருப்பப்படி, ‘தொம்பிலிப்பு’ இதைப் பாடினார் என்றுரைப்பர்.

ஒல்லாந்தர் காலத்தில் எழுந்த இலக்கியங்களினை ஆய்வு வசதி கருதி, அவற்றின் பொருள் உள்ளடக்கத்துக்கு ஏற்ப,
பிரபந்த இலக்கியங்கள்
பிரபந்த வகையைச் சாராத இலக்கியங்கள் என இரண்டு வகைகளுக்குட்படுத்தி நோக்குவது பொருத்தமானதாக இருக்கும்.



அ. பிரபந்த இலக்கியங்கள்

புராணம்- சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பிள்ளையார் புராணம் -இவை மூன்றும் வரத பண்டிதரினால் பாடப்பட்டன.

தூது- கண்ணியவளை குருநாத சுவாமி மீது கிள்ளை விடு தூது -இது வரத பண்டிதரால் பாடப்பட்டது.
பஞ்சவர்ணத்தூது -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

அம்மானை- திருச்செல்வர் அம்மானை – தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார்

காதல்- வெருகல் சித்திரவேலாயுதர் காதல் -தம்பலகாமம் வீரக்கோன் முதலியார்

கோவை- கரவை வேலன் கோவை –நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்

அந்தாதி- கல்வளை அந்தாதி, மறைசை அந்தாதி -இவை இரண்டையும் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பாடினார்.
புலியூர் அந்தாதி -மாதகல் மயில்வாகனப் புலவர்

பள்ளு- பறாளை விநாயகர் பள்ளு –நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
தண்டிகை கனகராயர் பள்ளு –மாவிட்டபுரம் சின்னக்குட்டி ஐயர்

பதிகம்- இணுவில் சிவகாமியம்மை பதிகம் -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

ஊஞ்சல்- வட்டுக்கோட்டை பிட்டியம்பதி பத்திரகாளியம்மன் ஊஞ்சல் -வட்டு.கணபதிஐயர்

துதி- இணுவில் சிவகாமியம்மை துதி -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

பிள்ளைத் தமிழ்- இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் -இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

விளக்கம்- காசியாத்திரை விளக்கம் -மாதகல் மயில்வாகனப் புலவர்



ஆ. பிரபந்த வகை சாராத இலக்கியங்கள்

காவியம்- திருச்செல்வர் காவியம் -தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார்

நாடகம்- அதிரூபன், அதிரூபாவதி - வட்டு.கணபதிஐயர்
ஞானலங்காரரூப நாடகம் -மாதகல் மயில்வாகனப் புலவர்
நந்தினி நாடகம் - இணுவில் சின்னத்தம்பிப் புலவர்

வரலாறு- யாழ்ப்பாண வைபவமாலை – மாதகல் மயில்வாகனப் புலவர்

சோதிடம்- சந்தான தீபிகை – அராலி ச.இராமலிங்க முனிவர்

வைத்தியம்- அமுதாகரம் - வரத பண்டிதர்

3.2. போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அதிகளவிலான பிரபந்தங்கள் தோன்றுவதற்குச் சாதகமாக அமைந்த காரணிகள்

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தில் என்றுமில்லாதவாறு, ஈழத்தில் அதிகப்படியான பிரபந்த இலக்கியங்கள் தோன்றின. தமிழகத்தில் விஜயநகர நாயக்கர் காலம் நிலவிய அதேகாலத்தில் ஈழத்தை போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆட்சி புரிந்து வந்தனர். சமகாலத்தில் ஈழத்திலும் தமிழகத்திலும் பிரபந்தங்கள் அதிகப்படியாகத் தோன்றின. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலத்தில் பிரபந்தங்கள் அதிகப்படியாகத் தோன்ற பல்வேறு காரணிகள் தூண்டுதலாக அமைந்தன.

(அ) போத்துக்கேயர் – ஒல்லாந்தர் கால அரசியல் நிலையானது முன்னைய ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தமையினால் மக்களின் சமூக வாழ்வியலும் தவிர்க்க முடியாதபடி மாறியது அல்லது மாற்றியமைக்கப்பட்டது. போத்துக்கேயர் 1621இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முன்னரேயே யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மதம் ஓரளவு பரவத் தொடங்கியிருந்தது. 1542ஆம் ஆண்டு 600 பேர் மன்னாரில் கிறிஸ்த்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டதை அறிந்த சங்கிலி மன்னன் படையுடன் மன்னார் சென்று மதகுருவையும் மதம் மாறியோரையும் கொலை செய்தான்.(4)

இதன் விளைவாகச் சைவ-கிறிஸ்தவ முரண்பாடு உச்ச நிலைக்குச் சென்று பின் அது யாழ்ப்பாணத்தையே போத்துக்கேயர் கைப்பற்றக் காரணமாக அமைந்தது. போத்துக்கேயரின் யாழ்ப்பாண ஆக்கிரமிப்பானது சமய-சமூக ரீதியில் பெருந் தாக்கத்தினை உண்டுபண்ணியது. சைவ வழிபாட்டு மரபுகள், சடங்காசாரங்கள் என்பன அந்நியரால் தடுக்கப்பட்டன. இதனால் சைவ விசுவாசிகளிடம் தம் சமயத்தையும் தலங்களையும் அந்நியரிடம் விடக்கூடாது என்ற எண்ணம் தலைதூக்க அவை சிறுசிறு புகழ்ச்சிப் பாடல்களாகவும் பிரபந்தங்களாகவும் தோற்றங் கண்டன.

(ஆ) யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலத்தில் சிறந்த பல தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்கள் தமிழையும் சைவத்தையும் சிறப்புடன் ஆதரித்து வளர்த்தனர். அதனால் அக்காலப் புலவர்கள் மன்னரையும் புகழ்ந்து பாடினர். மன்னர்கள் புலவர்களாக இருந்தும் தமிழை வளர்த்தனர். ஆனால் போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அந்நிய நாட்டினர் ஆட்சி புரிந்தமையினால் அது தமிழ்ப் புலவர்களின் மனநிலையில் பாரிய தாக்கத்தினை உண்டு பண்ண, அவர்கள் கடவுளைப் பாட முற்பட்டனர். மக்களையும் பொருள்வசதி படைத்த புரவலர்களையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டும் சிலர் பிரபந்தங்களைப் பாடினர்.

(இ) போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கைக்கு வந்த நோக்கங்களில் முக்கியமானது மதம் பரப்புதலாகும். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட கீழைத்தேச நாடுகளைக் கைப்பற்றிய இவர்கள் வர்த்தகத்தையும் மதம் பரப்புதலையும் நோக்கமாகக் கொண்டு தமது நடவடிக்கைகளைச் செவ்வனே செய்து வந்தனர். அடிநிலை மக்களை இலகுவில் மதம் மாற்றிவிட முடியும் என்பதை உணர்ந்த அந்நியர்கள் சுதேச மொழியில் இலகு நடையில் கிறிஸ்தவமதம் சார்பான கருத்துக்களை மக்களிடம் விதைத்தனர். இதற்கென அவர்கள் தெரிவு செய்த இலக்கிய வடிவம் ‘பிரபந்தம்’ ஆகும்.

(ஈ) அந்நியர்கள் தமது மதப்பிரச்சாரத்துக்காக தெரிந்தெடுத்த இலக்கிய வடிவமான பிரபந்தத்தையே சைவப் புலவர்களும் எதிர்ப் பிரச்சாரத்துக்குத் தெரிவு செய்தனர். அகத்திணை மரபில் பின்பற்றப் பட்டு வந்த காதல், தூது, போன்றவற்றை இறையியலுடன் இணைத்துப்பாடி மக்களைச் சைவ பக்தி என்ற வட்டத்துக்குள் மறுபடியும் கொண்டுவருவது இவர்களின் நோக்கமாக இருந்தமையினால் சித்திரவேலாயுதர் காதல், கிள்ளைவிடுதூது போன்ற சிற்றிலக்கியங்களைப் பாடினர்.

3.3. போத்துக்கேயர் - ஒல்லாந்தர் கால இலக்கியங்களின் பண்புகள்

ஈழநாட்டில் பாரம்பரியமாக மக்களிடையே நிலவி வந்த உயரிய ஒழுக்கங்கள் பல போத்துக்கேயர்-ஓல்லாந்தரின் வருகையுன் இழக்கப்பட்டன. உயர் இலக்கண, இலக்கிய, சமய கல்விகள் மறைமுகமாகக் கற்க-கற்பிக்க வேண்டிய சூழல் உருவானது. கிறிஸ்த்தவம் போதிக்கப்பட்ட இடங்களாகப் பாடசாலைகள் மாற்றியமைக்கப் பட்டன. பின்னையநாளில் ஒல்லாந்தர் சற்று நெகிழ்வுப் போக்குடன் இருந்தமையினால் சைவசமயம் சார்பான இலக்கியங்களும் தோன்ற வழியேற்பட்டது.

போத்துக்கேயர் காலத்துக்குரியதான மூன்று நூல்களுமே கிறிஸ்தவ மதச்சார்புடன் காணப்பட்ட நிலையில் ‘ஞானப்பள்ளு’ ஈழத்து இலக்கிய மரபில் இருந்து விடுபட்டு உரோமபுரியையும் ஜெருசலத்தையும் விதந்து பாடும் தன்மையுடன் விளங்குகின்றமை சுட்டத்தக்கது. இதன்மூலம் கிறிஸ்து புகழை தமிழ்க் கிறிஸ்தவர் மத்தியில் நிலைநாட்ட ஞானப்பள்ளு பயன்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் அம்மானை வடிவினைத் தொட்டுக்காட்ட மணிவாசகர் அதனையே பாட, அதில் சிறு மாறுபாட்டுடன் தெல்லிப்பளை பூலோகசிங்க முதலியார் போத்துக்கேயர் காலத்தில் ஆர்ச்யாகப்பர் அம்மானையைப் பாடினார். பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் திருச்செல்வர் அம்மானை பாடிக் கிறிஸ்தவ மதப் பெருமைகளை நிலைநிறுத்தினார்.

விரதமகிமைகளைக் கூறும் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், பிள்ளையார் புராணம் போன்றனவும் தத்தம் ஊர்களிலுள்ள தலங்களை முன்னிலைப் படுத்தும் நூல்களும் பாடப்பட்டன. வட்டுக்கோட்டை கணபதிஐயர், இணுவில் சின்னத்தம்பிப் புலவர் போன்றோர் இத்தகைய இயல்புகளுடன் கூடிய மண்வாசனை இலக்கியங்களைப் படைத்தனர். இது இவ்வாறிருக்க மாதகல் மயில்வாகனப் புலவர் காசி, சிதம்பரம் போன்ற தலங்களுக்கு யாத்திரை செய்து மீண்டபின் அவைபற்றிப் பிரபந்தங்களைப் பாடினார்.

தனிப்பட்டவர்களின் வாழ்க்கை வரலாறும் நூலாகப் பாடப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் உள்@ர் பிரபுத்துவ முறைமை உயர்த்தப்பட்டு பிரபுக்கள் பாட்டுடைத் தலைவர்களாக மாறும் நிலை உருவானது. கரவைவேலன்கோவை, தண்டிகை கனகராயன் பள்ளு(5) போன்ற இலக்கியங்களினை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

இராசமுறை, வையாபாடல், கோணேசர் கல்வெட்டு, கைலாயமாலை முதலிய முன்னைய நூல்களின் வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து, தன்னுடைய காலக் கர்ணபரம்பரைக் கதைகளையும் இணைத்து வசனநடையில் ‘யாழ்ப்பாண வைபவ மாலை’யினை மாதகல் மயில்வாகனப் புலவர் பாடியுள்ளார்.(6) இதேவேளை சாதாரண மக்களுக்கான செய்திகள் பல கூத்து, நாடகம் என்ற வடிவங்களினூடே மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன.

போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கிய வடிவமானது பிரபந்தம், காவியம், உரைநடை(வசனம்), நாடகம், கூத்து போன்ற பல தரங்களுக்கு உட்பட்டிருந்தது. பிரபந்தங்கள் சமயச் சார்புடையனவாயும் தமிழகப் பிரபந்தங்களுடன் வடிவில் ஒத்துப் போவதாகவும் அமைந்திருந்தன. பொதுவாக எதுகை, மோனை, யாப்பு முதலானவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றபோது கவித்துவம் நழுவிவிடுவதும் உண்டு.(7) இத்தகைய நழுவலை இவ் இலக்கியங்களில் காணமுடிகின்றது.

வௌ;வேறு சமூகநிலைப்பட்ட மக்களைக் கொண்ட சூழலில் இலக்கியம் படைக்க முற்படுகின்ற போது, குறிப்பாக பிரச்சார இலக்கியங்களை படைக்கின்ற போது, அவரவர் மொழியில் அவர்களுக்கு இலகுவில் புரியும்படி இலக்கியங்களை படைப்பது அவசியமாகின்றது. இந்த உண்மையை புரிந்து போர்த்துக்கேய ஒல்லாந்தர்கால இலக்கியங்கள் படைக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இருந்த போதிலும் யமகம், திரிபு முதலிய சொல்லணிகளின் கையாட்சியையும் இக்கால இலக்கியங்களில் பரக்கக் காணக்கூடியதாகவுள்ளது.

1 comment:

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!