Thursday, October 17, 2013

வள்ளலாரின் சமுதாயச் சிந்தனைகள் – பேராசிரியர் டாக்டர் சு.சிவகாமசுந்தரி

இந்திய நாடு பழம்பெருமையும் புதுமைச் சிறப்பும் பெற்றுத் திகழும் நாடு இத்தகு நாட்டின்
மக்களை எண்ணிப் பார்த்துத் தமிழ்நாட்டில் “சிதம்பரம் இராமலிங்கம்’, “வடலூர் வள்ளலார்’,
“வள்ளலார்’, “திரு அருட்பிரகாச வள்ளலார்’ என்றெல்லாம் அழைக்கப்பெறும் இராமலிங்க அடிகள்
தோன்றிச் செய்த சமுதாய விழிப்புணர்ச்சியை எண்ணிப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம்.
சன்மார்க்க அறநெறி :
மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழத்தில் சன்மார்க்க மரபு வளர்ந்து வருகின்றது சன்மார்க்கத்தின்
அடிப்படைக்கொள்கைகள் -மனிதன் வாழுகின்ற சமுதாயத்தை நினைத்துப் பார்ப்பது, மன்னுயிர்க்கு இரங்குதல், பசிபோக்குதல் ,உயிர்க்கொலை தவிர்த்தல் ,ஆருயிர்க்கும் அன்புசெய்தல் ,மனிதச் சமத்துவம் காணுதல் எனலாம் சன்மார்க்க நெறியினைத் திட்டமிட்டு மன்னர்களும் மக்கட் கூட்டமும் முறையாக வளர்த்தமையைச் சங்கஇலக்கியங்களும் சுட்டுகின்றன.
மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் சன்மார்க்கத்தின் வழித் தம் காலத்தில் முதற்கட்டமாகப்
பசிநீர்க்கும் பேரறத்தை இவ்வுலகத்தில் நிலைநாட்டி அதன் வழியாகச் சமுதாயத்தை உயர்த்த எண்ணிய வள்ளலார் தம்மைச் சுவாமிகள் என அழைப்பதோ , வணங்குவதோ தமக்கு உடன்பாடல்ல என்பதைப் பல இடங்களில் உணர்த்துவார்.
அன்றைய தென்னார்க்காடு இன்றைய வள்ளலார் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம்
மருதூரில் 1823 அக்டோபர் 5ல் தோன்றினார் .தாம் பிறந்த காரணத்தைத் திருஅருட்பாவில் பின்வருமாறுகூறுவார் .
“”அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்திருந்த உலகர் அனைவரும் சகத்தே திருத்திச்
சன்மார்க்கச் சங்கத் தடைவித் திடவும் ”
மேலை நாடுகளிலிருந்தோ வேறு வேறு புலங்களிலிருந்தோ இறக்குமதியான எவற்றிக்கும்
அடிமையாகாது,”"உயிர் இரக்கம் ,மனித நேயம் ,மனிதவள மேம்பாடு” என்பதை மட்டும் தமது
சிந்தனைக்கும் எழுத்துக்கும் மேல்வரிச் சட்டமாக அடிநாதமாக இலக்காக வைத்துக்கொண்டு வள்ளல் பெருமான் வாழ்ந்தார் இதற்காகவே பாடல்கள் ஆறாயிரம்,உபதேச உரைகள் ,திருமுகங்கள் ,உரைநடைகள் உருவாக்கினார். அவர் நல்ல நூலாசிரியர் ,உரையாசிரியர் ,பதிப்பாசிரியர் ,
இதழாசிரியர் ,போதகாசிரியர் ஆவார்.
அன்றைய நாட்டுநிலை:
வள்ளல் பெருமான் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பிய ,ஆங்கில நாகரிகம் இந்தியாவைப்
பெருமளவில் தாக்கியிருந்தது மக்களின் அறியாமை ,வறுமை இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு மதமாற்றம் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது .இதனை முழுமையாக உணர்ந்ததால்தான்
“”வாயிலீரென இருக்கின்றீர் அல்லால் வாய்திறந்தொரு வார்த்தையும் சொல்லீர் ”
எனத் திருஅருட்பாப் பாடினார்
“”வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில்யான் ஒருவன்” என்பதை ஏற்றுக்கொண்டாலும் சமுதாய மாற்றம் தேவை என்பதற்கு ஓங்கித் தனிக்குரல் தமிழ்க்குரல் -மனிதக்குரல் கொடுத்தார் அவர் .
அவர் காலத்தில் இந்தியாவின் வடக்கு ,ஊனையும் உயிரையும் உருக்கக் கூடிய கொடிய பஞ்சத்தை அனுபவித்ததன் வேர் தமிழகத்திலும் பரவியதைக் கண்டார் வெறும் சோற்றுக்கு மக்கள் பட்டபாட்டினைக் கண்டு , “”நெருப்பிலே உருக்கும் நெய்போல” வருந்தி ,”"கஞ்சியாதிகளைப்பெற” மக்கள் நாள் முழுவதும் அலைந்து “”சிறிதும் உண்டிலேம் ” என வாய்விட்டு அரற்றி வாழ்ந்ததைக் கண்டு வருந்தினார்.
அப்பார்வையின் உருவாக்கத்தான் வடலூரில் 1867ல் “”சத்திய தருமச்சாலை ” எனப்பெயர்
பெற்ற “”அறக்கூழ்ச்சாலை ” தோற்றுவிக்கச் செய்தது. வள்ளல் பெருமானின் சமுதாயச் சிந்தனையில் தட்டிய முதற்பொறி பசிப்பிணி போக்குவதுதான்.
வடலூரில் அமைத்த சத்திய தருமச்சாலையில் சோறிடுவதால் உலகம் முழுமைக்கான
பசிக
்கொடுமை நீங்கிவிடுமென வள்ளலார் கருதவில்லை .இல்லந்தோறும் சத்திய தருமச்சாலைகள்
தோன்றிப் பசியே இல்லாத ஒரு புதிய சன்மார்க்கச் சமுதாயம் அமையவேண்டுமென்பதே
அவரது பெருவிருப்பு.
அன்புப்புரட்சி:
அவர் காலத்திய தேவை “அன்பு’தான் என்பதைப் பல வரிகளால் காட்டுவார்.
“”அன்பெனும் பிடியன் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புரரு வாம்பர சிவமே”
எனும் பாடல் வழி அன்பெனும் இறைத் தத்துவத்திற்குள் மனிதக் கூட்டமே அடக்கம் என்பதைத்
தெளிவாக காட்டுவார்.
சாதி-சமய வேற்றுமை:
உயிர் வருத்தம் நீங்கி மனிதகுலம் ஒன்றுபட வேண்டும்,சாதி,குலம் ,சமயம் ,மதம் ,சாத்திரம் ,
கோத்திரம் ,ஆசாரம் இவை அனைத்தும் மனித சிந்தனைக்கும் ,செயற்பாட்டுக்கும் தடையாக உள்ளன. சாதிபேதமற்ற சன்மார்க்கச் சமுதாய படைப்பதில் கருத்துகளைச் சொல்லவும் செயல்படவும் தமக்குப் பின் வழித் தோன்றில்கள் பல உருவாகுவது போல எழுதினார்.
“”நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை
யாட்டு” என்றும் “”சாதியும் ,மதமும்,சமயமும் பொய் ”
என்றும் “”சாதி சமயவிகற் பங்களெல்லாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல்
வேண்டும் ” என்றும்
“”கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக”
என்றும் பல நிலைகளில் தமது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறுவார் . சாதி ,சமய மதங்கடந்த
மனித ஒருமைப்பாட்டுப் பேரன்பு உலக முழுமைக்கும் வெளிப்பட வேண்டும் .
கல்லார்க்கும் கற்றவர்க்கும் வல்லார்க்கும் ,மாட்டார்கள் எல்லாருக்கும் பொதுவான ஒரு சமுதாயம் எம்மதமோ எக்குலமோ ” என்ற சிந்தனைக்கு இடமில்லாத ,”"எப்பொருளும் எவ்வுயிரும் ,எவ்வுலகும் ஒன்றே” என்ற ஒப்பற்ற சமுதாயம் உருவாக வேண்டும்
சமனிலைச் சமுதாயம் :
நிலத்தை விளைவிப்பவர் ஒருவராகவும் அதன் பலனை அனுபவிப்பவர் மற்றவராகவும்
உள்ள நிலை மாறி ,நிலத்தை விளைத்தவனே அறுவடை செய்து பலனையும் அனுபவிக்கக் கூடியவனாக ஆகக் கூடிய சமுதாயம் பற்றி வள்ளலார் சிந்திக்கின்றார் ஒரு மாபெரும் மறுமலர்ச்சி உரிமை இயக்கமே இதனால் மலர்ந்தது எனலாம்
“”எளியவர் விளைத்த நிலமெலாம் கவரும் எண்ணமே பெரிதுளேன் புன்செய்க் களியுறும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சிபால் கேட்டுண்ட கடையேன்
தனியவர்க் குதவேன் விருப்பிலான் போலச் சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்”
என்ற வரிகள் வள்ளலாரின் சமனிலைச் சமுதாய உணர்வுக்குச் சான்றாக அமைகின்றன .
பொருள் ஒரு கூடத்தில் தேங்கிக் கிடக்கக்கூடாது;முடக்கவும் கூடாது ஏதாவது
காரணங்காட்டிக் கவர்ந்து கொள்ளவும் கூடாது தான் உழைக்காது அடுத்தவர் உழைத்துச் சேர்த்து
வைத்திருக்கக்கூடிய பொருளின் மீது எக்காரணங்கொண்டும் இச்சை வைக்கக்கூடாது எனவும்
வள்ளல் பெருமான் வலியுறுத்துகிறார்.
“”கூட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே காசிலே ஆசையில்
லாதவன்போல் பாட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
பகலெலாம் தவசிபோல் இருந்தேன் ”
தன்னுழைப்பை நம்பாமல் ,அடுத்தவர்களைச் சுரண்டித்தான் வாழவேண்டும் என்கிற அளவுக்குத்
தமிழக வளம் குறைந்துவிடவில்லை இடத்தவர்கள் வருத்தாது ,பன்னாடுகளில் கடன் பெறாது
பொருளைப் பெருக்கிக் கொள்ளத்தக்க வளம் தமிழ்நாட்டில் நிறைய உண்டு என்பதை வள்ளல்
பெருமான் வகுத்துக் காட்டுவர்.
“” நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற நிலம்உண்டு பலனும்உண்டு
நி��
�ிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட நெறிஉண்டு நிலையும் உண்டு
ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு உடைஉண்டு கொடையும் உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம் உறும் உளம் உண்டு வளமும் உண்டு”
என்று பதிகத்தில் அவர் குறிப்பிடுவார்.
பணத்திலே சிறுதும் ஆசை தமக்கு இல்லையென்று அவர் ஒப்புக்கொண்டாலும் மற்றவர்கள்
வாழ்வு சிறக்கப் பணம் வேண்டும் என்பதையும் அவர் உணராமல் இல்லை .
“” ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக் காசும் பெறவிரிக்கும் கைகள்”
காசில்லாமையால் வாட்டம் கொண்ட மக்கள் நாளும் வருந்தி ஊர்விட்டுஊர் குடிபெயர்ந்தமையை அவர் காணத் தவறவில்லை
“”சோடில்லை மேல்வெள்ளைச் சொக்கா யில்லை நல்ல சோம னில்லை
பாடில்லை கையிற் பணமில்லை ” எனத் தம்மைப்பற்றிக்கூட ஓர் இடத்தில் வள்ளல்பெருமான் எழுதுவார். தாம் மேற்கொண்ட தருமச்சாலைப் பணி முடிக்கப் பணம் தேவையெனத் தம் நண்பர்களுக்குத் திருமுகங்கள் வழிக்கூடத் தெரிவித்திருக்கின்றார்.
கல்விக்கண்:
நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் கல்வி பொதுவாக்கப்பட வேண்டும் .சாகாக்கல்வி
பற்றி அறிய வேண்டும் சந்தைப் படிப்பில்லாத சொந்தப் படிப்பு வேண்டும்.
“”சதுர்மறை ஆகம் சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ ?” என வள்ளல்பெருமான் வினவுவார்.
முன் மனத்தகத்தே எழுகின்ற அய்யப்பாடுகளையெல்லாம் அகற்றி ,முழு இன்பம் தரத்தக்க
கல்வியை ஆண் ,பெண் அனைவரும் கற்க வேண்டும் .இவ்வாறு மனித நேயக் கல்வியை ,
மனிதனை மனிதனாக்கும் கல்வியைக் கற்றுத் தருவதற்காகவே சமரசவேத பாடசாலை ஒன்றை நிறுவ வள்ளல்பெருமான் எண்ணியிருந்தார்.
இக்கல்வி அன்னைமொழியாகிய தமிழ்மொழிவழிக் கற்பிக்கப்படுதல் இன்றியமையாதது இதனை 21.0.1897 ல் உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை என்னும் திங்களிதழில்
“”தமிழ் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளால் எழுதப்பட்டது ” என்னும் தலைப்பில் காட்டுவார்
சிந்திக்கும் ஆற்றலைத் தமிழ்மொழியே மிக எளிதாகத் தரத்தக்கதாகையால் தமிழ்மொழி வழியே கற்கலாம் .தாய்மொழியைப் புறக்கணிக்காத சமுதாயம் உயர்வடையும் அதேபோதில்
பிற மொழிகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளும் சமுதாயமும் செழுமையடையும் என்பார்.
ஒளிவழிபாடு:
கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதியினர் என்று ஒளி வழிபாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவராலும் விளங்கிக்கொள்ளக் கூடியதாகக் கூறுவார்.
“”ஓன்றுமலார் இரண்டுமலார் ஒன்றிரண்டும் ஆனால் உருவும்அலார் அருவும் அலார்
உருஅருவும் தமக்கோர் அன்றும் உளார் இன்றும் உளார் என்றுமுளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அருட்பெருஞ்சோ தியினார்”
என்று திருச்சிற்றம்பலத்துத் தெய்வமணிமாலையில் குறித்துக்காட்டுவார் ; திருவருளாம் பெருஞ்சோதி என்றும் அருட்சோதித் தெய்வம் என்றும் சொல்லிச் சன்மார்க்கச் சமுதாயம் அமையம் அமைய விரும்பும் தமது விருப்பத்தைத் தெரிவிப்பார்.
ஒளிவழிபாட்டை விளக்க அமைத்த “சத்திய ஞானசபை’ 25.1.1872 ல் நிறுவப்பட்டது சத்திய ஞானசபையை அனைவரும் காணும்படியாக அமைத்துப் பின்னர் ஒவ்வொருவர் உள்ளம்தான் திருச்சேர்ஒளிக்கோயில் சபையாக மாற வேண்டுமென்பதை வள்ளல் பெருமான் “”சத்திய ஞான சபையென்றுட் கண்டனன்” என்பார்.
பெண்ணின் பெருமை :
வள்ளல் பெருமான் விரும்பிய சமத்துவ சமரச சமுதாயம் உருவாக உலகின்
செம்பகுதி இனமாகிய பெண்கள் உரிமையோடு வாழவேண்டும். வள்ளல பெருமான் வாழ்ந்த காலம் இத்தகு சிந்தனைகூடத் தவறு என்று வாதிட்ட காலமாகும் .பெண்ணைத் தெய்வமென ஒருபுறம் போற்றினாலும் மற்றொருபுறம் இழிவெனக் கருதினர்.ஆணுக்குப் பெண் அடிமையாகத்தான் வாழவேண்டும் என்றனர் .இக் க
ருத்தில் வள்ளல் பெருமானுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகிறது ஆண்மைக்குள் பெண்மையும் பெண்மைக்குள் ஆண்மையும் ஒன்றுபட்டுக் கலந்திருக்கிறது.
“”பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் சோதி”
என்று அருட்பெருஞ்சோதி அகவலில் தெளிவுபடுத்தியுள்ளார் .பெண்ணின் மனமும் ஆணின் அறிவும் ஒன்றுபடும் போது உலகம் உயர்வடையுமென்பது அவரது கருத்து.
“”தெய்வம் தொழாஅள் ” என்னும் தேவர் குறளால் இதை அறிக என உரைநடையில் வள்ளல்
பெருமான் எழுதுவார்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்வுகளும் உறவுகளும் சமஅளவில் இருப்பதால் அவர்களைத் தாழ்வாக எண்ண வேண்டுவதில்லை “”மனைவியை இழந்த கணவன் வேறு கல்யாணப் பிரயத்தனம் செய்ய வேண்டா” என்றும், “”புருஷன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டா” என்றும் கூறுவார் வள்ளல் பெருமானின் புதிய புரட்சிச் சிந்தனை சமுதாய உயர்வுக்கு ஊற்றாக அமையும்.

பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும் – நடன.காசிநாதன்


சோழப் பேரரசன் முதலாம் இராசராசன் கி.பி.985இல் முடிபுனைந்திருக்கிறான். முடி புனைந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே சேர நாட்டிலிருந்த காந்தளூர்ச் சாலையைத் தாக்கி வெற்றி பெற்றிருக்கிறான் என்பது அவனது மெய்க்கீர்த்தியால் நமக்குத் தெரிய வருகிறது. அவன் அவ்வாறு விரைந்து காந்தளூர்ச் சாலையைத் தாக்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆதித்த கரிகாலச் சோழன் கொலை
பொன் மாளிகைத் துஞ்சிய தேவரான சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன், அருண்மொழி என்று இரு மகன்களும் குந்தவை என்று ஒரு மகளும் இருந்திருக்கின்றனர். சுந்தர சோழன் இறப்புக்கு முன்பாகவே ஆதித்த கரிகாலன் சில சூழ்ச்சிக்காரர்களால் இரண்டகமாகச் சாகடிக்கப் பெற்றிருக்கிறான்
இத்துன்பச் செய்தி கடலூர் மாவட்டம், காட்டு மன்னார் கோயிலின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரன் கோயில் கல்வெட்டினால் தெரியவருகிறது. இவ்வூர், கல்வெட்டுகளில் “வீர நாராயணபுரச் சதுர்வேதிமங்கலம்” என்று குறிக்கப் பெறுகிறது. ஆதலால் இது முதலாம் பராந்தகச் சோழனால் ஏற்படுத்தப் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனருகில்தான் இப்பராந்தகச் சோழன் காலத்தில் அமைக்கப்பெற்ற வீரநாராயண ஏரியும் உள்ளது.
வீரநாராயணச் சதுர்வேதிமங்கலம்தான் வைணவ இலக்கியங்களில் பேசப்படும் வீரநாராயணபுரம் ஆகும். இவ்வீரநாரயணபுரத்தில்தான் வைணவப் பெரியார்கள் நாதமுனியும் அவரது திருப்பெயரர் யமுனாசார்யா என்று வழங்கப்பெற்ற ஆளவந்தாரும் தோன்றினர். ஆதலால் நான்கு வேதங்களும் கற்ற பார்ப்பன‌ர்கள் இவ்வூரில் முதலாம் பராந்தகன் காலம் முதலே வைணவ ஆசாரியர்கள் காலம் முடிய வாழ்ந்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. இங்குப் பெரும்பாலும் பார்ப்பன‌ர்கள்தான் நில உடைமையாளர்களாக விளங்கியிருக்கின்றனர் என்பதையும் கல்வெட்டுகள் காட்டுகின்றன.
உடையார்குடிக் கல்வெட்டு
இவ்வூர் அனந்தீசுவரன் கோயில் உண்ணாழியின் மேற்குச் சுவரில் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டுப் பகுதியைக் கீழே காண்போம்.
  1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோராஜகேஸரிவர்ம்மர்க்கு யாண்டு 2வது வடகரை ப்ரமதேயம் ஸ்ரீ வீரநாரயணச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களுக்கு சக்ரவர்த்தி ஸ்ரீ முகம் “பாண்டியனைத் தலைகொண்ட கரிகாலச் சோழனைக் கொன்று த்ரோஹிகளான சோம(ன்)…(இவன்) றம்பி
  2. ரவிதாஸன பஞ்சவன் பரஹ்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரனான இருமுடி சோழ ப்ரஹ்மதிராஜ்னும் இவகள் தம்பிமாரும் இவகள் மக்களிதும் இவர் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள் ப்ராஹ்மணிமா(ர்) பேராலும் (இவகள்…) றமத்தம்
  3. பேரப்பன்மாரிதும் இவகள் மக்களிதும் இவகளுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிதும் தாயோடப் பிறந்த மாமன்மாரிதும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும் இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முறி)யும் நம்மாணைக் குரியவாறு
  4. கொட்டையூர் ப்ரஹ்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்ரசேகர பட்டனையும் பெரத் தந்தோம் தாங்களும் இவகள் கண்காணியோடும் இவகள் சொன்னவாறு நம்மாணைக்குரியவாறு குடியொடு குடிபேறும் விலைக்கு விற்றுத் தாலத்திடுக இவை குறு(காடி)கிழான் எழுத்தென்று இப்பரிசு வர…
மேலே காணப்பெற்ற கல்வெட்டில் “பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனைக்” கொன்று “த்ரோஹிகளானவர்கள்” என்று தெளிவாகக் கூறப்பெற்றிருக்கிறது. அக்கொடும் பாதகச் செயலைச் செய்த துரோகிகள் யாவர் என்று அக்கொலையாளியின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறது. கொலையாளியின் பெயர்கள் அவர்கள் பார்ப்பன‌ர்கள் என்பதைக் காட்டுகின்றன. அப்பார்ப்பன‌ர்கள் ஏன் இந்த அழிவுச் செயலைச் செய்தார்கள் என்பது வரலாற்றாசிரியர்களுக்குப் புரியாத புதிராக இருந்து வருகிறது.
கொலைக்கான காரணம்
ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் சில ஊகங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாகச் சோழர் வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாத்திரியார், கண்டராதித்த சோழரின் மகனும், சுந்தரசோழனின் ஒன்றுவிட்ட உடன்பிறப்பான உத்தம சோழன்தான் இவ்வந்தணர்களை ஏவி ஆதித்த கரிகாலனைக் கொன்றிருப்பான் என்று கருதியுள்ளார். இக்கருத்து முற்றிலும் தவறு என்று வரலாற்றிலும் தமிழிலக்கியத்திலும் சிறந்த அறிஞரான தி.வை.சதாசிவ பண்டாரத்தார் தக்க சான்றுகளுடன் மறுத்திருக்கிறார். இருப்பினும் அவர் மறுப்பை ஏற்றுக்கொள்ளாத சென்னை விவேகாநந்தர் கல்லூரிப் பேராசிரியர், கே.ஏ.நீலகண்ட சாத்திரியார் கருத்தே மேலோங்கி நிற்கிறது என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
“இக்கட்டுரை உள்நோக்கம் கொண்ட கட்டுரை என்றும் தம் மரபினரைப் பாதுகாக்க எடுத்துக்கொண்ட முயற்சி” என்றும் தெரிவித்து வரலாற்று அறிஞர் க.த. திருநாவுக்கரசு தம் கட்டுரையொன்றில் சாடியிருக்கிறார். இவர், ஆதித்த கரிகாலன் பாண்டியனை வென்று அவனது தலையைக் கொண்டதால், பாண்டியனின் மரபினர் இவ்வந்தணர்களில் ஒருவனான “பஞ்சவன் பிரமாதிராசன்” மூலம் ஆதித்த கரிகாலச் சோழனைத் தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள் என்று புது விளக்கம் தந்துள்ளார். இவர், “பஞ்சவன் பிரமாதிராசன்” பாண்டியர்களின் அரசு அலுவலர் என்று கருதியிருக்கிறார். இவர் குறிப்பிட்டுள்ள “பஞ்சவன் பிரமாதிராசன்”, “ரவிதாசன்” என்பது ரவி குலத்தவனின் (சூரிய குலத்தினனின்) அடியான் என்று பொருள். எனவே, சூரியகுல அடியானாகிய பஞ்சவன் பிரமாதிராசன் சோழர், பாண்டியர்களை வென்றபொழுது, “பஞ்சவன் பிரமாதிராசன்” என்ற விருதுப் பெயரைச் சோழ வேந்தனால் சூட்டப்பட்டவனாகலாம். ஆதலால் அவன் சோழ அதிகாரியே தவிர பாண்டியனின் அரசதிகாரியில்லை.
கொலைக் கரணியம் யாது?
இந்தச் சூழ்நிலையில், ஆதித்த கரிகாலனைக் கொன்ற தீயவர் யாவர்? அவனைக் கொன்றதற்கான கரணியம் யாது? என்பது நம்முன் நிற்கும் வினாக்களாகும். இதற்கு விடை காண வேண்டுமென்றால் தொன்மத்தையும், இலக்கியத்தையும், கல்வெட்டு, செப்பேட்டு வரிகளையும் நாம் ஆராய வேண்டுவது தேவையாகிறது.
தொன்மம் கூறுவது என்ன?
சூரிய குலத்தில், கேகயநாட்டுக் கிருதவீரியனுக்கும் சுகந்தைக்கும் பிறந்தவன் கார்த்த வீரியன். இவன் ஒரு சத்திரியன். இவன் சமதக்கனி முனிவரிடமிருந்து “ஓமதேனு” எனும் பசுவைக் கவர்ந்ததனால் பரசுராமர் இவனைக் கொன்றார். இதைக் கேள்வியுற்ற கார்த்த வீரியர் மைந்தர், பரசுராமர் இல்லாத நேரத்தில் சமதக்கினி முனிவரைக் கொலை புரிந்தனர். பரசுராமர் அங்கு வந்தவுடன், சமதக்கினி முனிவர் தேவியார் இருபத்தோரு முறை தம் மார்பிலடித்துக்கொண்டு அவன் தந்தை இறந்த செய்தியைத் தெரிவித்தாள். கோபமுற்ற பரசுராமர் கார்த்தவீரியன் குலமாகிய சூரியகுல மரபினர்களை அழிப்பதாக உறுதிகூறி இருபத்தொரு தலைமுறை கருவறுத்தனன். அப்போது தப்பியவர்கள் கார்த்தவீரியன் புதல்வர்களாகிய சய்த்துவசன், வீரசேனன்,விருடணன்,மதுசூரன் அல்லது ஊர்ச்சிதன் ஆகியோராவர் என்று மச்சிய புராணம் கூறுகிறது.
இத்தொன்மத்தில் சூரிய குலத்தின் 21 தலைமுறைச் சத்திரியர்களைப் பரசுராமர் பூண்டோடு அழித்தார் என்பது மையக்கருத்தாகும். ஆனாலும் அவரிடமிருந்து தப்பியவர்களும் சிலர் இருந்தனர் என்பதுமாகும்.
இலக்கியக் கூற்று
இத்தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு சீத்தலைச் சாத்தனார் ஒரு செய்தியை மணிமேகலையில் தெரிவித்திருக்கிறார்.
“மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாதொளி நீயெனக்
கன்னி யேவலின் காந்த மன்னவன்
இந்நகர் காப்போன் யாரென நினைஇ
…………….
காவற் கணிகை தனக்காங் காதலன்
இகழ்ந்தோர்க் காயினும் என்சுத லில்லான்
ககந்தனா மெனக் காதலிற் கூஉய்
அரசா ளுரிமை நின்பால் இன்மையின்
பரசுராம னின்பால் வந்தணுகான்”
அதாவது, பரசுராமன்(மழுவாள் நெடியோன்) அரச குலத்தை(சத்திரிய குலத்தை) அழிப்பதற்காக உறுதியேற்றுக் கொண்டு புகார் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். நீ அவன் கண்ணில்படுவது தகாது, ஆதலால் நீ உன் கணிகை மகனான சுகந்தனிடம் ஆட்சியை ஒப்ப்டைத்துவிட்டு ஓடி ஒளிந்துகொள் என்று புகாரின் கன்னித்தெய்வம் “காந்தமன்” என்ற சோழ அரசினிடம் கூறியதுதான் அச்செய்தி. சோழர் சூரிய குலத்த்தைச் சார்ந்த சத்திரியர்கள் என்பதால்தான் பரசுராமன் சோழ வேந்தன் காந்த்மனைத் தாக்க வந்திருக்கிறான்.
மேலே குறிக்கப்பெற்ற இரு செய்திகளையும் அடிபடையாகக் கொண்டு ஆய்ந்து பார்ப்போமானால், சூரிய குலத்தில் தோன்றிய சோழ சத்திரிய அரசர்கள் மீது பரசுராமனுக்கும் அவரது மரபினர்க்கும் சினமும் எரிச்சலும் இருந்திருக்கிறது என்பது தெரியவரும்.
கல்வெட்டு, செப்புப் பட்டயச் சான்று
இயல்பாகவே கற்றறிந்த அந்தணர்கள் சத்திரியர் மீது மனக்கசப்பு கொண்டிருந்திருக்கின்றனர் என்பது பல்லவர் காலத்தில் கதம்ப பார்ப்பன‌ அரசன் “மயூரசர்மன்”, காஞ்சிபுரம் கடிகைக்கு உயர் கல்வி கற்க வந்தபோது, பல்லவர் குதிரை வீரன் ஒருவனால் கடிகைக்குள் நுழையவிடாது தடுத்துவிட்டபொழுது, அப்பார்ப்பன‌ மன்னன், “கடவுளே இந்தக் கலியுகத்தில் பார்ப்பன‌ர் சத்திரியர்களுக்கு அடங்கிய நிலையில் இருக்க வேண்டியுள்ளதே! பார்ப்பன‌ர் தன் குருவின் குடும்பத்துகு உரிய பணிவிடை செய்திருந்தாலும், வேதங்களின் உறுப்புகளை முறையாகப் படித்திருந்தாலும், அவன் சமயத்தில் முழுத்துவம் அடைவதற்கு (பல்லவ) அரசனைத்தான் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மனவலியை ஏற்படுத்த இதைவிட வேறு என்ன வேண்டியிருக்கிறது?” என்று தமக்குத் தாமே புலம்பியிருக்கிறான். இச்செய்தி தாலகுண்டாக் கல்வெட்டினால் புலப்படுகிறது. பல்லவர் சத்திரியர் என்பது காசாக்குடிச் செப்பேடு நரசிம்மவர்மனை “சத்திரிய சூளாமணி” என்பதாலும், திருவெள்ளறை மூன்றாம் நரசிம்மப் பல்லவன் தம்மை “சத்திரிய சிம்மன்” என்று அழைத்துக் கொண்டதாலும் உணரலாம்.
தாலகுண்டா கல்வெட்டு தெரிவிக்கும் முதன்மைச் செய்தி யாதெனில் பார்ப்பன‌ மன்னர்களும் பார்ப்பனர்களும் சத்திரிய மன்னர்கள் மீது வெளியில் காட்டிக் கொள்ளாத பகைமை உணர்வைக் கொண்டிருந்தார்கள் என்பதேயாகும். இதுவும் அந்தப் பரசுராமனின் சத்திரிய மன்னர்களின் அழிப்பின் ஒரு கூறே என்று கருதலாம்.
பரசுராமன் கதை மேற்போக்காகப் பார்க்கையில் ஒரு தொன்மம் போன்று தோன்றினாலும், பார்ப்பன‌ – சத்திரிய அரசர்களின் பகைமையை எதிரொலிப்பதாகவே அதைக் கொள்ளல் வேண்டும்.
கண்டராதித்தன் மேற்கெழுந்தருளியது எதற்காக?
பிறகாலச் சோழ மன்னர்களில் முதற்பராந்தகனின் மகன் கண்டராதித்தனை “மேற்கெழுந்தருளிய தேவர்” என்று உடையார்குடிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவர் சோழ நாட்டின், மேற்குப் பகுதிக்கு எதற்காகச் சென்றார் என்பதில் வரலாற்றாசிரியர்கள் வேறுபட்ட கருத்தைக் கூறியுள்ளனர். இவன் மேற்றிசையில் இராட்டிரகூட மன்னரோடு பொருது அதில் இறந்திருக்கலாம் என்பது ஒரு கருத்து. இம்மன்னன் தல யாத்திரைக்குச் சென்று திரும்பாமை என்பது பிறிதொரு கருத்து.
இவர் காலத்தில் முதன் முதலாகக் “கண்டராதித்த பெரும் பள்ளி” என்ற புறச் சமயக் கோயில் ஏற்படுத்தப்பெற்றிருக்கிறது. கண்டராதித்த சோழனின் இப்புறச் சமயச் சார்பும், இவன் ஒரு சத்திரிய மன்னன் என்ற நிலையும், இவன், 9ஆம் திருமுறையில் சேர்க்கப் பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவன் என்பதும், காந்தளுர்ச் சாலையிலிருந்த பரசுராமன் வழிவந்தோரை இவன் மீது வெறுப்படையச் செய்திருக்கும். அவர்களை அமைதிப்படுத்த இம்மன்னன் சென்றிருக்கலாம். அப்போது மேற்குத் திசையில் (சேர நாட்டுக் காந்தளூர்ச் சாலையில்) இம்மன்னன் நயவஞ்சகமாக சாகடிக்கப்பட்டிருக்கலாம். ஆதலால் இவன் மீண்டும் சோழ நாட்டுக்குத் திரும்ப இயலாது போய்விட்டது. இதுதான் “மேற்கெழுந்தருளிய தேவர்” என்ற மரியாதைச் சொல்லுக்கு உரிய பொருளாக இருக்கும்.
இம்மன்னன் காந்தளூர்ச் சாலையில் கொல்லப்பெற்ற செய்தி, இவரது தம்பி மகனாகிய சுந்தரசோழன் ஆட்சியின் இறுதிக் காலத்தில்தான் தெரிய நேர்ந்திருக்கிறது. சுந்தர சோழனை அவன் காலத்தில் வெளியிடப் பெற்ற அன்பில் செப்பேடு “சத்திரியர்களில் முதன்மையானவன்” என்று புகழ்ந்துரைக்கிறது.
சத்திரியர்களின் எதிரியான பரசுராமனின் வழிவந்தோரால் தம் பெரிய தந்தை சாகடிக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தவுடன் தம் மூத்த மகன் ஆதித்த கரிகாலனைக் காந்தளூர்ச்சாலைக்கு அனுப்பி அந்நயவஞ்சகர்களைத் தண்டிக்க தக்க நடவடிக்கையை மேற்கொண்டிருப்பான்.அத்திட்டம் தம் செவிகளுக்கு எட்டவே பரசுராமன் வழிவந்தோரில், உடையார்குடியில் வாழ்ந்து வந்த மேலே குறிப்பிட்ட நான்கு “துரோகிகளும்” ஆதித்த கரிகாலனைச் சூழ்ச்சி செய்து கொன்றுவிட்டனர்.
சுந்தர சோழனும் மிகுந்த தமிழ்ப்பற்றாளன் என்பதை “வீரசோழியம்” என்னும் தமிழ் இலக்கண நூல் உரை விரித்துரைத்துள்ளது. தாம் ஒரு சத்திரியன் என்பதும், தம் தமிழ்ப்பற்றும்தான் சுந்தர சோழனின் உடனடி நடவடிக்கைகுக் காரணமாகலாம்.
கொலையாளிகளைக் கண்டறிவதில் சுணக்கம்
ஆதித்த கரிகாலனைக் கொன்ற தீயவர்களைக் கண்டறிவதில் காலச் சுணக்கமாகியிருக்கும். ஆதலால் தான் உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் அக்கயவர்களைத் தண்டிக்க இயலவில்லை. அவனுக்குப் பின்பு அரசாட்சி ஏற்ற முதலாம் இராசராசன் தம் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே “அத்துரோகிகள்” யார் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களது நிலம் மற்றும் அவர்களது உறவினர்களின் நிலங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விற்று, அரசுக்கருவூலத்தில் ஒப்படைக்கக் கட்டளையிட்டிருக்கிறான் இராசராசன் என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும்.
காந்தளூர்ச் சாலையை முதலில் தாக்கியதன் காரணம்
ஆதலால் தம் இரண்டாம் ஆட்சியாண்டில் அக்கயவர்களுக்குத் தண்டனை வழங்கிவிட்டு,தம் மூன்றாம் ஆட்சியாண்டிலேயே அக்கொலைக்கு மூலக்காரணியர்களான காந்தளூர்ச்சாலையிலிருந்த பரசுராமன் வழிவந்தோரை வாதத்தில் வென்று தாம் ஒரு “ராஜஸர்வஞ்ஞன்” என்பதைப் புலப்படுத்தியதோடு, அச்சாலையை நிலைகுலையச் செய்து, பின்பு தம் பெருந்தன்மையால் மீண்டும் அதைப் பழைய நிலையிலேயே இயங்கவும் செய்ததைத் தம் முதல் வெற்றியாகவும், மற்ற எல்லா வெற்றிகளிலும் முதன்மையானதாகவும் கருதியிருக்கிறான். எனவேதான் அவ்வெற்றியை தம் மெய்கீர்த்தியில் “காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி” என்று முதலாவதாகக் குறிப்பிட்டுக் கொண்டான்.
பரசுராமன் நாடு
திருவாலங்காட்டுச் செப்பேட்டில் முதலாம் இராசராசனுடைய இவ்வெற்றி “பரசுராமனது நாட்டை வென்றது” என்று குறிப்பிடப்படுகிறது. இதேபோன்று இப்பெருவேந்தனின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா மகன் முதலாம் இராசேந்திரனும் “சோழ நாட்டுக்கு மேற்கே அமைந்திருந்த சேரநாட்டையும் பல்பழந்தீவுகளையும் வெற்றி கொண்டதோடு, சேரரின் முடியையும், மாலையையும், பரசுராமரால் சாந்திமத்தீவில் வைக்கப்பெற்றிருந்த செம்பொன் முடியையும் தம் ஐந்தாம் ஆட்சியாண்டில் கவர்ந்து கொண்டான்” என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
திருமறை இருக்குமிடம் காட்ட மறுத்ததன் காரணம்
ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகளைத் தண்டித்ததற்கும் தில்லை நடராசர் கோயிலில் திருமறைகள் இருக்குமிடத்தைக் காட்ட மறுத்த தில்லை மூவாயிரவர் செயலுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். ஏனெனில் தில்லை மூவாயிரவரும் சேர நாட்டைச் சேர்ந்தவர்களேயாவர். அவர்களுக்கும் பரசுராமன் வழி வந்தோரான காந்தளூர்ச்சாலை அந்தணர்களுக்கும் உடையார்குடித் துரோகிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம். ஏனெனில் திருமறை ஓத முக்கிய இடம்.
ஆதித்த கரிகாலனைப் பார்ப்பன‌ர்கள் கொன்றதன் கரணியத்தாலோ என்னவோ இராசராசன் தம் நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பகரமாகத் திருமறை ஓதுவதற்கு மிகுந்த முதன்மை தந்திருக்கிறான். இங்கு மற்றொன்றையும் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.
ஒரேயொரு செப்புப் பட்டயம்
பிற்காலச் சோழர்களில் பெரும் புகழ் படைத்த பேரரசாக விளங்கிய இராசராசன் வெளியிட்டதாக ஒரே ஒரு செப்புப் பட்டயம்தான் இதுவரை கிடைத்திருக்கிறது. அப்பட்டயமும் “க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டுப் பட்டணக் கூற்றத்து நாகப்பட்டிணத்தில் கடாரத்தரையன் சூளாமணி பன்மனால் அமைக்கப் பெற்ற புத்தப் பள்ளிக்கு” அளிக்கப் பெற்ற நிலக் கொடையைக் குறிப்பதாகத்தான் உள்ளது. பார்ப்பன‌ர்களுக்கு இவன் காலத்தில் நிலக்கொடை வழங்கி வெளியிட்ட செப்புப் பட்டயம் ஒன்றுகூட இதுவரை கிடைக்காமலிருப்பதும், இவன் பார்ப்பன‌ர்கள்மீது கொண்டிருந்த வெறுப்பை எதிரொலிப்பதாகவே தெரிகிறது.
இம்மன்னன் தாம் “சத்திரியர்களின் சிகாமணி” என்று பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறான். மேலும் ஒரு வளநாட்டுக்குச் “சத்திரிய சிகாமணி வளநாடு” என்று பெயரிட்டிருக்கிறான். ஆதலால் தாம் ஒரு “சத்திரியன்” என்று கூறிப் பெருமைப்பட்டிருக்கிறான். இவையெல்லாம் முதலாம் இராசராசனின் பரசுராமர் வழிவந்தோர் எதிர்ப்பைப் புலப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
- தொல்லியலறிஞர் நடன. காசிநாதன்,
தமிழ்நாட்டரசுத் தொல்லியல் துறை மேனாள் இயக்குநர்
(கட்டுரை: “முதன்மொழி” சிற்றிதழின் அக்தோபர் – திசம்பர் 2010 வெளியீட்டில் வந்தது)

வள்ளலாரின் சமுதாயச் சிந்தனைகள்


இந்திய நாடு பழம்பெருமையும் புதுமைச் சிறப்பும் பெற்றுத் திகழும் நாடு இத்தகு நாட்டின்
மக்களை எண்ணிப் பார்த்துத் தமிழ்நாட்டில் “சிதம்பரம் இராமலிங்கம்’, “வடலூர் வள்ளலார்’,
“வள்ளலார்’, “திரு அருட்பிரகாச வள்ளலார்’ என்றெல்லாம் அழைக்கப்பெறும் இராமலிங்க அடிகள்
தோன்றிச் செய்த சமுதாய விழிப்புணர்ச்சியை எண்ணிப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம்.
சன்மார்க்க அறநெறி :
மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழத்தில் சன்மார்க்க மரபு வளர்ந்து வருகின்றது சன்மார்க்கத்தின்
அடிப்படைக்கொள்கைகள் -மனிதன் வாழுகின்ற சமுதாயத்தை நினைத்துப் பார்ப்பது, மன்னுயிர்க்கு இரங்குதல், பசிபோக்குதல் ,உயிர்க்கொலை தவிர்த்தல் ,ஆருயிர்க்கும் அன்புசெய்தல் ,மனிதச் சமத்துவம் காணுதல் எனலாம் சன்மார்க்க நெறியினைத் திட்டமிட்டு மன்னர்களும் மக்கட் கூட்டமும் முறையாக வளர்த்தமையைச் சங்கஇலக்கியங்களும் சுட்டுகின்றன.
மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் சன்மார்க்கத்தின் வழித் தம் காலத்தில் முதற்கட்டமாகப்
பசிநீர்க்கும் பேரறத்தை இவ்வுலகத்தில் நிலைநாட்டி அதன் வழியாகச் சமுதாயத்தை உயர்த்த எண்ணிய வள்ளலார் தம்மைச் சுவாமிகள் என அழைப்பதோ , வணங்குவதோ தமக்கு உடன்பாடல்ல என்பதைப் பல இடங்களில் உணர்த்துவார்.
அன்றைய தென்னார்க்காடு இன்றைய வள்ளலார் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம்
மருதூரில் 1823 அக்டோபர் 5ல் தோன்றினார் .தாம் பிறந்த காரணத்தைத் திருஅருட்பாவில் பின்வருமாறுகூறுவார் .
“”அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்திருந்த உலகர் அனைவரும் சகத்தே திருத்திச்
சன்மார்க்கச் சங்கத் தடைவித் திடவும் ”
மேலை நாடுகளிலிருந்தோ வேறு வேறு புலங்களிலிருந்தோ இறக்குமதியான எவற்றிக்கும்
அடிமையாகாது,”"உயிர் இரக்கம் ,மனித நேயம் ,மனிதவள மேம்பாடு” என்பதை மட்டும் தமது
சிந்தனைக்கும் எழுத்துக்கும் மேல்வரிச் சட்டமாக அடிநாதமாக இலக்காக வைத்துக்கொண்டு வள்ளல் பெருமான் வாழ்ந்தார் இதற்காகவே பாடல்கள் ஆறாயிரம்,உபதேச உரைகள் ,திருமுகங்கள் ,உரைநடைகள் உருவாக்கினார். அவர் நல்ல நூலாசிரியர் ,உரையாசிரியர் ,பதிப்பாசிரியர் ,
இதழாசிரியர் ,போதகாசிரியர் ஆவார்.
அன்றைய நாட்டுநிலை:
வள்ளல் பெருமான் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பிய ,ஆங்கில நாகரிகம் இந்தியாவைப்
பெருமளவில் தாக்கியிருந்தது மக்களின் அறியாமை ,வறுமை இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு மதமாற்றம் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது .இதனை முழுமையாக உணர்ந்ததால்தான்
“”வாயிலீரென இருக்கின்றீர் அல்லால் வாய்திறந்தொரு வார்த்தையும் சொல்லீர் ”
எனத் திருஅருட்பாப் பாடினார்
“”வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில்யான் ஒருவன்” என்பதை ஏற்றுக்கொண்டாலும் சமுதாய மாற்றம் தேவை என்பதற்கு ஓங்கித் தனிக்குரல் தமிழ்க்குரல் -மனிதக்குரல் கொடுத்தார் அவர் .
அவர் காலத்தில் இந்தியாவின் வடக்கு ,ஊனையும் உயிரையும் உருக்கக் கூடிய கொடிய பஞ்சத்தை அனுபவித்ததன் வேர் தமிழகத்திலும் பரவியதைக் கண்டார் வெறும் சோற்றுக்கு மக்கள் பட்டபாட்டினைக் கண்டு , “”நெருப்பிலே உருக்கும் நெய்போல” வருந்தி ,”"கஞ்சியாதிகளைப்பெற” மக்கள் நாள் முழுவதும் அலைந்து “”சிறிதும் உண்டிலேம் ” என வாய்விட்டு அரற்றி வாழ்ந்ததைக் கண்டு வருந்தினார்.
அப்பார்வையின் உருவாக்கத்தான் வடலூரில் 1867ல் “”சத்திய தருமச்சாலை ” எனப்பெயர்
பெற்ற “”அறக்கூழ்ச்சாலை ” தோற்றுவிக்கச் செய்தது. வள்ளல் பெருமானின் சமுதாயச் சிந்தனையில் தட்டிய முதற்பொறி பசிப்பிணி போக்குவதுதான்.
வடலூரில் அமைத்த சத்திய தருமச்சாலையில் சோறிடுவதால் உலகம் முழுமைக்கான
பசிக
்கொடுமை நீங்கிவிடுமென வள்ளலார் கருதவில்லை .இல்லந்தோறும் சத்திய தருமச்சாலைகள்
தோன்றிப் பசியே இல்லாத ஒரு புதிய சன்மார்க்கச் சமுதாயம் அமையவேண்டுமென்பதே
அவரது பெருவிருப்பு.
அன்புப்புரட்சி:
அவர் காலத்திய தேவை “அன்பு’தான் என்பதைப் பல வரிகளால் காட்டுவார்.
“”அன்பெனும் பிடியன் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புரரு வாம்பர சிவமே”
எனும் பாடல் வழி அன்பெனும் இறைத் தத்துவத்திற்குள் மனிதக் கூட்டமே அடக்கம் என்பதைத்
தெளிவாக காட்டுவார்.
சாதி-சமய வேற்றுமை:
உயிர் வருத்தம் நீங்கி மனிதகுலம் ஒன்றுபட வேண்டும்,சாதி,குலம் ,சமயம் ,மதம் ,சாத்திரம் ,
கோத்திரம் ,ஆசாரம் இவை அனைத்தும் மனித சிந்தனைக்கும் ,செயற்பாட்டுக்கும் தடையாக உள்ளன. சாதிபேதமற்ற சன்மார்க்கச் சமுதாய படைப்பதில் கருத்துகளைச் சொல்லவும் செயல்படவும் தமக்குப் பின் வழித் தோன்றில்கள் பல உருவாகுவது போல எழுதினார்.
“”நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை
யாட்டு” என்றும் “”சாதியும் ,மதமும்,சமயமும் பொய் ”
என்றும் “”சாதி சமயவிகற் பங்களெல்லாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல்
வேண்டும் ” என்றும்
“”கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக”
என்றும் பல நிலைகளில் தமது விருப்பத்தை வெளிப்படையாகக் கூறுவார் . சாதி ,சமய மதங்கடந்த
மனித ஒருமைப்பாட்டுப் பேரன்பு உலக முழுமைக்கும் வெளிப்பட வேண்டும் .
கல்லார்க்கும் கற்றவர்க்கும் வல்லார்க்கும் ,மாட்டார்கள் எல்லாருக்கும் பொதுவான ஒரு சமுதாயம் எம்மதமோ எக்குலமோ ” என்ற சிந்தனைக்கு இடமில்லாத ,”"எப்பொருளும் எவ்வுயிரும் ,எவ்வுலகும் ஒன்றே” என்ற ஒப்பற்ற சமுதாயம் உருவாக வேண்டும்
சமனிலைச் சமுதாயம் :
நிலத்தை விளைவிப்பவர் ஒருவராகவும் அதன் பலனை அனுபவிப்பவர் மற்றவராகவும்
உள்ள நிலை மாறி ,நிலத்தை விளைத்தவனே அறுவடை செய்து பலனையும் அனுபவிக்கக் கூடியவனாக ஆகக் கூடிய சமுதாயம் பற்றி வள்ளலார் சிந்திக்கின்றார் ஒரு மாபெரும் மறுமலர்ச்சி உரிமை இயக்கமே இதனால் மலர்ந்தது எனலாம்
“”எளியவர் விளைத்த நிலமெலாம் கவரும் எண்ணமே பெரிதுளேன் புன்செய்க் களியுறும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சிபால் கேட்டுண்ட கடையேன்
தனியவர்க் குதவேன் விருப்பிலான் போலச் சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன்”
என்ற வரிகள் வள்ளலாரின் சமனிலைச் சமுதாய உணர்வுக்குச் சான்றாக அமைகின்றன .
பொருள் ஒரு கூடத்தில் தேங்கிக் கிடக்கக்கூடாது;முடக்கவும் கூடாது ஏதாவது
காரணங்காட்டிக் கவர்ந்து கொள்ளவும் கூடாது தான் உழைக்காது அடுத்தவர் உழைத்துச் சேர்த்து
வைத்திருக்கக்கூடிய பொருளின் மீது எக்காரணங்கொண்டும் இச்சை வைக்கக்கூடாது எனவும்
வள்ளல் பெருமான் வலியுறுத்துகிறார்.
“”கூட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே காசிலே ஆசையில்
லாதவன்போல் பாட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
பகலெலாம் தவசிபோல் இருந்தேன் ”
தன்னுழைப்பை நம்பாமல் ,அடுத்தவர்களைச் சுரண்டித்தான் வாழவேண்டும் என்கிற அளவுக்குத்
தமிழக வளம் குறைந்துவிடவில்லை இடத்தவர்கள் வருத்தாது ,பன்னாடுகளில் கடன் பெறாது
பொருளைப் பெருக்கிக் கொள்ளத்தக்க வளம் தமிழ்நாட்டில் நிறைய உண்டு என்பதை வள்ளல்
பெருமான் வகுத்துக் காட்டுவர்.
“” நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற நிலம்உண்டு பலனும்உண்டு
நி��
�ிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட நெறிஉண்டு நிலையும் உண்டு
ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு உடைஉண்டு கொடையும் உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம் உறும் உளம் உண்டு வளமும் உண்டு”
என்று பதிகத்தில் அவர் குறிப்பிடுவார்.
பணத்திலே சிறுதும் ஆசை தமக்கு இல்லையென்று அவர் ஒப்புக்கொண்டாலும் மற்றவர்கள்
வாழ்வு சிறக்கப் பணம் வேண்டும் என்பதையும் அவர் உணராமல் இல்லை .
“” ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக் காசும் பெறவிரிக்கும் கைகள்”
காசில்லாமையால் வாட்டம் கொண்ட மக்கள் நாளும் வருந்தி ஊர்விட்டுஊர் குடிபெயர்ந்தமையை அவர் காணத் தவறவில்லை
“”சோடில்லை மேல்வெள்ளைச் சொக்கா யில்லை நல்ல சோம னில்லை
பாடில்லை கையிற் பணமில்லை ” எனத் தம்மைப்பற்றிக்கூட ஓர் இடத்தில் வள்ளல்பெருமான் எழுதுவார். தாம் மேற்கொண்ட தருமச்சாலைப் பணி முடிக்கப் பணம் தேவையெனத் தம் நண்பர்களுக்குத் திருமுகங்கள் வழிக்கூடத் தெரிவித்திருக்கின்றார்.
கல்விக்கண்:
நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் கல்வி பொதுவாக்கப்பட வேண்டும் .சாகாக்கல்வி
பற்றி அறிய வேண்டும் சந்தைப் படிப்பில்லாத சொந்தப் படிப்பு வேண்டும்.
“”சதுர்மறை ஆகம் சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ ?” என வள்ளல்பெருமான் வினவுவார்.
முன் மனத்தகத்தே எழுகின்ற அய்யப்பாடுகளையெல்லாம் அகற்றி ,முழு இன்பம் தரத்தக்க
கல்வியை ஆண் ,பெண் அனைவரும் கற்க வேண்டும் .இவ்வாறு மனித நேயக் கல்வியை ,
மனிதனை மனிதனாக்கும் கல்வியைக் கற்றுத் தருவதற்காகவே சமரசவேத பாடசாலை ஒன்றை நிறுவ வள்ளல்பெருமான் எண்ணியிருந்தார்.
இக்கல்வி அன்னைமொழியாகிய தமிழ்மொழிவழிக் கற்பிக்கப்படுதல் இன்றியமையாதது இதனை 21.0.1897 ல் உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை என்னும் திங்களிதழில்
“”தமிழ் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகளால் எழுதப்பட்டது ” என்னும் தலைப்பில் காட்டுவார்
சிந்திக்கும் ஆற்றலைத் தமிழ்மொழியே மிக எளிதாகத் தரத்தக்கதாகையால் தமிழ்மொழி வழியே கற்கலாம் .தாய்மொழியைப் புறக்கணிக்காத சமுதாயம் உயர்வடையும் அதேபோதில்
பிற மொழிகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளும் சமுதாயமும் செழுமையடையும் என்பார்.
ஒளிவழிபாடு:
கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதியினர் என்று ஒளி வழிபாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவராலும் விளங்கிக்கொள்ளக் கூடியதாகக் கூறுவார்.
“”ஓன்றுமலார் இரண்டுமலார் ஒன்றிரண்டும் ஆனால் உருவும்அலார் அருவும் அலார்
உருஅருவும் தமக்கோர் அன்றும் உளார் இன்றும் உளார் என்றுமுளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அருட்பெருஞ்சோ தியினார்”
என்று திருச்சிற்றம்பலத்துத் தெய்வமணிமாலையில் குறித்துக்காட்டுவார் ; திருவருளாம் பெருஞ்சோதி என்றும் அருட்சோதித் தெய்வம் என்றும் சொல்லிச் சன்மார்க்கச் சமுதாயம் அமையம் அமைய விரும்பும் தமது விருப்பத்தைத் தெரிவிப்பார்.
ஒளிவழிபாட்டை விளக்க அமைத்த “சத்திய ஞானசபை’ 25.1.1872 ல் நிறுவப்பட்டது சத்திய ஞானசபையை அனைவரும் காணும்படியாக அமைத்துப் பின்னர் ஒவ்வொருவர் உள்ளம்தான் திருச்சேர்ஒளிக்கோயில் சபையாக மாற வேண்டுமென்பதை வள்ளல் பெருமான் “”சத்திய ஞான சபையென்றுட் கண்டனன்” என்பார்.
பெண்ணின் பெருமை :
வள்ளல் பெருமான் விரும்பிய சமத்துவ சமரச சமுதாயம் உருவாக உலகின்
செம்பகுதி இனமாகிய பெண்கள் உரிமையோடு வாழவேண்டும். வள்ளல பெருமான் வாழ்ந்த காலம் இத்தகு சிந்தனைகூடத் தவறு என்று வாதிட்ட காலமாகும் .பெண்ணைத் தெய்வமென ஒருபுறம் போற்றினாலும் மற்றொருபுறம் இழிவெனக் கருதினர்.ஆணுக்குப் பெண் அடிமையாகத்தான் வாழவேண்டும் என்றனர் .இக் க
ருத்தில் வள்ளல் பெருமானுக்கு உடன்பாடில்லை என்பது தெளிவாகிறது ஆண்மைக்குள் பெண்மையும் பெண்மைக்குள் ஆண்மையும் ஒன்றுபட்டுக் கலந்திருக்கிறது.
“”பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் சோதி”
என்று அருட்பெருஞ்சோதி அகவலில் தெளிவுபடுத்தியுள்ளார் .பெண்ணின் மனமும் ஆணின் அறிவும் ஒன்றுபடும் போது உலகம் உயர்வடையுமென்பது அவரது கருத்து.
“”தெய்வம் தொழாஅள் ” என்னும் தேவர் குறளால் இதை அறிக என உரைநடையில் வள்ளல்
பெருமான் எழுதுவார்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்வுகளும் உறவுகளும் சமஅளவில் இருப்பதால் அவர்களைத் தாழ்வாக எண்ண வேண்டுவதில்லை “”மனைவியை இழந்த கணவன் வேறு கல்யாணப் பிரயத்தனம் செய்ய வேண்டா” என்றும், “”புருஷன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டா” என்றும் கூறுவார் வள்ளல் பெருமானின் புதிய புரட்சிச் சிந்தனை சமுதாய உயர்வுக்கு ஊற்றாக அமையும்.

மனிதநேய நோக்கில் வள்ளலாரும் பாரதியும்

மனிதநேய நோக்கில் வள்ளலாரும் பாரதியும் – தா. நீலகண்டபிள்ளை

ஆன்மீக சிந்தனைகளை எடுத்துரைப்பதில் வள்ளலாரும் பாரதியும் சிறந்து விளங்கியுள்ளார்கள் என்பதை அவர்களது பாடல்கள் வழி அறிய முடிகிறது. வள்ளலாரும் பாரதியும் இலக்கிய உலகில் மட்டுமல்லாது, ஆன்மீக உலகிலும் ஒரே நோக்கில் செயல்பட்டமையைக் காணலாம். இருவரது கொள்கைகளும் பல நிலைகளில் ஒத்துக் காணப்பட்டமை இங்கு ஆய்வு செய்யப்படுகின்றது.
எல்லோரும் ஓர் குலம்:-
வள்ளலாரின் கொள்கை இறைவனை நோக்கியதாக மட்டுமல்லாமல் உலகம், சமுதாயம், சமூகம் நோக்கியதாக இருந்தது. இராமலிங்கர் சிறந்த சீர்திருத்தவாதி, சமுதாயப் புரட்சியாளர். பாரதியும் தனது சமூக அரசியல் பாடல்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் தந்துள்ளார். அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பது வள்ளலாரின் முக்கியக் கொள்கை. எல்லோரும் இன்புற்றிருக்க அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்ற தாயுமானவர் கொள்கையைப் போன்றே, பாரதியும்,
”வாழ்ந்தால் முப்பது கோடியும் வாழ்வோம்”
என்று பொது நிலையைக் காட்டுகின்றார். இக்கொள்கை இன்று அனைவரிடமும் இருந்தால் இன்றைய கலவரங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் இடமே இல்லை.
சமூக நோக்கு:-
பாரதியும், வள்ளலாரும் பக்தியை மட்டும் பாடாமல், சமுதாய மாற்றத்தை, ஏற்றத்தாழ்வை, மூடப்பழக்கங்களைக் கண்டிக்கும் போக்குடன் கூடிய பாடல்களையே அதிகம் பாடியுள்ளனர். இருவரிடமும் மூடப் பழக்கவழக்கங்களைக் களைந்து சமுதாய மறுமலர்ச்சி காணும் நோக்கே காணப்படுகின்றது. தனி மனித ஒழுக்கம், மனிதன் சமூகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் என்பன மனித சமுதாயம் உள்ளவரை ஏற்றுக்கொள்ளக்குரியன. பக்தி மார்க்கத்தில் உள்ளோர் அனைவருக்கும் இறைவனை அடைவது மட்டுமே முக்கிய நோக்கமாக அமைய, வள்ளலார் பாரதி போன்றோர் கருத்துக்கள் வழிபடுதல் மட்டுமல்லாது, இன்றைய, உலகச் சூழலுக்கு ஏற்ற வகையிலும் உள்ளது.
ஆன்மநேயம்:-
வள்ளலார், சமரச சன்மார்க்கக் கொள்கைகளை உபதேசித்தார். இறைவன் ஒருவனே என்ற கொள்கையை நிலை நிறுத்தியவர். கடவுளை உண்மை அன்பால் வழிபட வேண்டும். பிற உயிர்களைக் கொல்லக்கூடாது. புலால் உண்ணலாகாது. பிற உயிர்களின் பசித்துன்பத்தைப் போக்குதல் வேண்டும். மரபு வழிபட்ட பழக்க வழக்கங்களைக் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிக்கக்கூடாது. புராணமும் சாத்திரமும் முடிவான உண்மையைத் தெரிவிப்பதில்லை. சாதி சமய வேறுபாடு இல்லா நிலை உருவாக வேண்டும். ஆண் பெண் வேறுபாடு கூடாது. எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணும் ஆன்ம நேய உணர்வு தேவை என்பதை வலியுறுத்துகின்றார்.
பாரதியும்,
”ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்”,
”சாதி சமயம் பேசும் சழகர்காள்” என்றும்
”உயிர்களிடத்தில் அன்பு வேணும் தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேண்டும்”.
”வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்”,
”வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் – இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்
பயிற்றி யுழுதுண்டு வாழ்வீர் பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்”,
”உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாம்
……………………………
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார்”!
”கடமையாவன, தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்”
”மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியும் உண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ? புலனில்
வாழ்க்கை இனியுண்டோ.
தனியொரு மனிதருக்கு உணவில்லை யெனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”
எனப் பலவாறாகப் பாடி மனித நேயக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பியுள்ளார்.
மனிதநேயச் சிந்தனைகள்:-
உலக மனிதர் ஒவ்வொருவரும் ஒரு ஜ“வன். பசி, தாகம், பிணி, இச்சை, கொலை போன்ற காரணங்களால் ஜிவன்கள் துன்பப்படுகின்றன. இத்துன்பங்கள் களையப்பட வேண்டும்.
”உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்” என இத்தோடு நிற்காமல் பசிப்பிணி அகற்றலே தெய்வீகப்பணி என்பதை நடைமுறைப்படுத்தியவர் வள்ளலார். அதற்காக 22.05.1867-இல் வடலூரில் ”சத்திய தருமசாலை”யை நிறுவினார். ஒருவர் பசித்திருக்க மற்றவர் புசித்திருக்கும் நிலையைப் பாரதியும் கோபாவேசத்துடன் கூறுகின்றார். ”இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வாழ்வதற்கே” என்ற வள்ளுவர் கருத்தை வள்ளலாரும், தொடர்ந்து பாரதியும் நெறிப்படுத்துகின்றனர். இராமலிங்கர் வாடுவோரின் வாட்டத்தைத் தீர்த்ததோடு இறைவனிடம்,
”ஏழை உலகுயிர்த் துன்பம் இனி பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள் நின்அருள் ஒளியைக்
கொடுத்தருள் இப்போதே” என்றுரைக்கின்றார்.
பசிப்போரை ஒழிக்க நிறுவப்பட்ட பாசறையாகத் தருமச்சாலை விளங்குகிறது. வேதாந்தம் பேசிய சமயவாதிகளுக்கிடையே வறுமைக்கு எதிராகப் போர்தொடுத்த முதல் துறவி வள்ளலார் ஆவார். முதல் கவிஞர் பாரதி ஆவார்.
ஜ“வகாருண்யம்:-
மனித ஆத்ம வளர்ச்சிக்கு, உரிய சாதனம் ஜ“வகாருண்யம் என்பது வள்ளலார் கொள்கை. அவர் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார். பானுறு பசுக்கள், கன்றுகள் கதறிய போதெல்லாம் பயந்தார். உயிர்ப்பலிக்கு உள்ளம் குலைந்தார். புலாலினை வெறுத்தார். மேலும் மனிதன் எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுதல் வேண்டும். மாறாத அன்பு செலுத்துதல் வேண்டும். பக்தி, மனம் ஒன்றிய தியானம் இவற்றால் நம் உள்ளம் இறைவன் உறையும் இல்லமாக மாற வேண்டும். அன்பு அருளைப் பெற்றுப் பிறர்க்கும் பகிர்ந்தளித்து வாழ்பவன் மரணமிலாப் பெருவாழ்வு அடைகின்றான் என்கிறார்.
பாரதியும்,
”நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தும் அருள்வது உன் கடன்”
என இறைவனிடம் மக்களுக்காக வேண்டுகின்றார். மேலும்,
”பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள் பறவைகள்,
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே”
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே,
”பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமும் இடிமையும் நோவும்
சாவு நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம்
இன்புற்று வாழ்க”
என ஆறறிவு முதல் ஓரறிவு உயிர்கள் வரை துன்பம் நீங்கி நலம் பெற வேண்டும் என ஜ“வகாருண்ய ஒழுக்கத்தைப் போற்றுகின்றார்.
வள்ளலார் ஜ“வ ஒழுக்கத்தைப் பொதுமை ஒழுக்கமாக அறிவுறுத்துகின்றார். கொல்லாமை, பொறுமை, சாந்தம், இந்திரிய, நிக்கிரகம் என்ற கோட்பாடுகளை வலியுறுத்துகின்றார். ஜ“வ ஒழுக்கம் என்பது, ஆண், பெண் போன்றோரிடம் சாதி, சமயம், மதம், ஆசிரமம், சாத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேச மார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீக்கி, எல்லாரும் தம்மவர்களாய்ச் சமமாகக் கொள்வது.
பாரதியும், மனதில் உறுதி வேண்டும்….. எனத் தொடங்கும் பாடலில் இறைவன் இவற்றைத் தந்தருள வேண்டும் என வேண்டுகின்றார்.
”எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணி பாவமெல்லாம் பரிதிமுன் பனியே போல
நண்ணி நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும்”
என இறைவனை வேண்டுகின்றார்.
மனவேற்றுமைக்குச் சினமே காரணம். சினம் தோன்றினால் சமநிலை மாறுபட்டு வேறுபாடுகள் உருவாகும். வேறுபாடுகள் தோன்றின் மக்களிடத்து அன்பு கெடும். இதனைப் பாரதி,
”சினங்கொள்வார் தமைத்தாமே தீயார் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார் சினங் கொள்வார் தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மாளுவாராம்”
எனக் கூறுகின்றார்.
சமரச சன்மார்க்கம்:-
இன்றைய உலகில் பூசல்களும், அதனால் உயிர் இழப்புகளும் அதிகமாயுள்ளன. அதற்கு முதற்காரணமாகச் சமயக்காழ்ப்பு அமைகிறது. சமயக்காழ்ப்பு மறைய வேண்டும் என்பதற்காக வள்ளலார் 1865-இல் ”சமரச சன்மார்க்க சங்கத்தை” நிறுவி அதற்கு ”சமரச வேத சன்மார்க்க சங்கம்” எனப் பெயர் வைத்தார். பின்னர் ”சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” எனப் பெயர் மாற்றி அமைத்தார். இது அருளறத்தை அடிப்படையாகக் கொண்டது. அருள் இல்லாமல் சன்மார்க்கம் இல்லை என்பதை,
”அருளே நம்துணை அருளே நம்தொழில்
அருளே நாமறிவாயென்ற சிவம் என்கிறார்”
”சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்திய சுத்த சன்மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே” என்கிறார்.
”அன்பென்று கொட்டு முரசே – மக்கள்
அத்தனை பேரும் நிகராம்”
என அனைவரும் ஒன்று என்கிறார். இவ்வுலகைச் செப்பம் செய்தல் வேண்டும் என்று சூளுரைத்த பாரதி,
”வேடிக்கை மனிதரைப் போல் – நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ”
தன்னால் இவ்வுலகைச் சரிசெய்ய முடியும் என்று உரைத்துள்ளார்.
இவ்வாறு வள்ளலாரும், பாரதியும் ஒரே நோக்கில் மனிதநேய, ஆன்மநேய, ஜ“வகாருண்ய, சன்மார்க்க நெறிகளைத் தந்து, மனிதர்களைச் சமூக நோக்கில் பரந்த மனப்பான்மையில் செயல்படத் தூண்டியுள்ளார்கள். உலக உயிர்கள் யாவும் சிறந்து விளங்க நல்ல பல சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளனர்.
நன்றி: ஆய்வுக்கோவை

மட்/முதலைக்குடா மகவித்தியலயத்தில் 186 புள்ளிகளை பெற்ற சந்திரராசு தனஞ்சயன்

இவ்வருடம் வெளியான தரம் 05 புலமைப்பரீட்சையில் மட்/முதலைக்குடா மகவித்தியலயத்தில் 186 புள்ளிகளை பெற்ற சந்திரராசு தனஞ்சயன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 வது நிலையினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு முதலைக்குடா மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்கிறோம்.

தமிழர் நோக்கில் பண்பாடும் மொழியும்

 

தமிழ்ப் பண்பாடு பெருமையாகச் சொல்லிக்கொள்ளப்படும் ஒன்று. தமிழர்களுக்கே உரிய பண்புகள் சில உண்டு என்பதும் அவை தமிழர்களைத் தனிப்படுத்திக் காட்டுவன, சிறப்புப்படுத்திக் காட்டுவன என்பதும் தமிழ் சார்ந்த அறிவு ஜீவிகளிடம் பரவலாகக் காணப்படும் நம்பிக்கை. தமிழர்களைத் தனிப்படுத்திக் காட்டுவதில் முதன்மையானது மொழி என்பதில் ஐயமில்லை. மொழி பண்பாட்டின் அடிப்படையான அம்சம்; பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனம். தனிப்படுத்திக் காட்டும் மற்ற பண்பாட்டுக் கூறுகள் எவை என்று நிறுவுவது எளிதானது அல்ல. அந்தப் பண்பாட்டுக் கூறுகள் மற்ற சமூகத்தினரிடம் இல்லாதவையாக இருக்க வேண்டும்; தமிழ்ச் சமூகத்தின் எல்லாப் பிரிவினரிடையேயும் இருப்பவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றைத் தமிழருக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளாகச் சொல்ல முடியும்.
இந்த இரண்டு அடிக்கோல்களின் அடிப்படையில் புறநோக்கில் தனித் தன்மையைக் கணிப்பது கடினமானது. தமிழ்ப் பண்பாடு என்று தமிழர்கள் சொல்லும்போது அவர்கள் அகநோக்கில் தங்களைப்பற்றி மானசிகப்படுத்திக்கொள்வதையே குறிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது தான் உண்மையானது. இவ்வாறு மானசிகப்படுத்திக்கொள்வது பெரும்பாலும் அறிவுஜீவிகளால் செய்யப்பட்டுப் பொதுமக்களுக்குப் பரவும் எனவே அது அறிவுஜீவிகளின் வாழ்க்கை மதிப்பீட்டை ஒட்டி அமைந்திருக்கும். இவ்வாறு மானசிகப்படுத்திய பண்புக் கூறுகள் வேறு சமூகத்தினரிடையேயும் இருக்கலாம்; தமிழர்களின் நடைமுறை வாழ்க்கையில் இல்லாமலும் இருக்கலாம். மானசிகப்படுத்துவதற்கு இந்த நடைமுறை உண்மைகள் தடையாக இருப்பதில்லை.
தங்கள் பண்புக் கூறுகள் சிறந்தவை என்பதும் ஒருவகை வாழ்க்கை மதிப்பீட்டின் அடிப்படையில் கூறுவதுதான். மதிப்பீடு இல்லாத நிலையில் பண்புகளில் ஏற்றத்தாழ்வு இல்லை.
கற்பு என்ற பண்பை எடுத்துக்கொள்வோம். தமிழ்க் கற்பு என்பது உயர்ந்த பண்பாகப் போற்றப்படும் ஒன்று. பொதுநிலையில் கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பால் ஒழுக்க உறவை வரையறுக்கும் ஒரு பண்பு. எந்தச் சமூகத்திலும் அதன் கட்டுக்கோப்பைக் காக்கவும், அதன் சுய வளர்ச்சியை உறுதிசெய்யவும் அவசியமாக இருக்கும் பண்பு. இந்தப் பண்பு ஒவ்வொரு சமூகத்திலும் அதன் தேவைக்கு ஏற்றபடி ஒவ்வொரு விதமாக இருக்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்குப் பலர் போன்ற பலவும் வெவ்வேறு சமூகங்களில் வழங்குகிற, அந்தந்தச் சமூகங்களுக்குத் தேவையான கற்பு நெறிகள்தான்.
ஒருத்திக்கு ஒருவன் என்ற கற்பு நிலையே தமிழ்ப் பண்பாடாகப் பேசப்படுகிறது. ஏக பத்தினி விரதன், பிறன்மனை நோக்காப் பேராண்மை என்று ஆண் நிலையிலும் கற்பு பேசப்பட்டாலும் கற்பு, பெண்ணின் ஒழுக்க நெறியாகவே நடைமுறையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மழை வருவித்தல், ஊரை எரித்தல் போன்ற இயற்கை விதிகளை மீறும் ஆற்றலைப் பெண்ணின் கற்புக்குக் கொடுத்திருப்பதைப் போல ஆணின் கற்புக்குத் தனி ஆற்றல் எதுவும் கொடுக்காதது இது வெளிப்படுத்தும். எனவே கற்பு என்பதற்குத் தமிழ்ப் பண்பாட்டில் தனி அர்த்தம் கொடுக்கப்படுகிறது. அது பெண்ணின் பால் ஒழுக்க நெறியை வரையறுக்கும் பண்பாகவே கொள்ளப்படுகிறது.
மனத்தாலும் மற்ற ஆணை நினைக்கக்கூடாது என்று பெண் கற்பை வலியுறுத்தும் தமிழ்ச் சமூகத்தில்தான் திரைப்படக் கதாநாயகனை மனத்தால் கூடும் “சினிமாவுக்குப் போன சித்தாளு” வும் உறுப்பினராக இருக்கிறார்கள். இதேபோல் பெண்ணைத் தெய்வமாகப் போற்றுவது தமிழ்ப் பண்பு என்று சிறப்பித்துக் கூறிக்கொள்ளும் தமிழ்ச் சமூகத்தில்தான் பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றுவிடுகிற பிரிவினரும் இருக்கிறார்கள். எனவே தமிழ்ப் பண்புகள் என்று போற்றப்படுபவை நடைமுறையில் இல்லாவிட்டாலும் மானசிகப்படுத்திக் கொண்ட பண்புகளே.
மானசிகப்படுத்திக்கொண்ட பண்புகள் ஆதர்சநிலையை காட்டுகின்றன. ஆதர்ச நிலை விதிநிலையை நிர்ணயிக்கிறது. தமிழ்ப் பண்பாடு என்று தமிழர்கள் பேசும்போது தாங்கள் ஆதர்சநிலையிலும் விதிநிலையிலும் காண்கிற ஒன்றைத்தான் குறிக்கிறார்கள். அது நடைமுறையில் இருக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.
இப்படி நடக்க வேண்டும் என்ற நடத்தை விதிகளும் பண்பாட்டின் கூறுதான். அவை இதை இப்படிச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் விதிப்பதுபோல சமூகத்தின் அறிவுஜீவிகள் விதிக்கும் பண்புக்கூறுகள். அவை ஒருவன் தன்னியல்பாக உண்ணும் உணவல்ல. மருத்துவர் விதிப்படி உண்ணும் பத்திய உணவு. மரபிலக்கண விதிகள் எப்படி மொழியைப் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தும் மொழி விதிகள் ஒருவனுடைய இயல்பான பேச்சின், எழுத்தின் அடிப்படையாக அமைந்திருக்கும் விளக்க விதிகள் அல்ல. தமிழர்கள் தமிழ்ப் பண்பாடு என்று செல்லும்போது மேலே சொன்ன கட்டுப்பாடு விதிகளையே குறிக்கிறார்கள்.
இது இப்படி இருக்கவேண்டும் என்ற விதிமுறையில் அல்லாமல் இது இப்படி இருக்கிறது என்று விளக்கமுறையில் பார்க்கும்போது உலகின் எல்லாப் பண்பாடுகளுக்கும் பொதுவான, அடிப்படையான கூறு, வாழ்க்கையை அர்த்தப் படுத்திக் கொள்வது. உண்பது, உறங்குவது, உடலுறவுகொள்வது மட்டுமே மனித வாழ்கை அல்ல என்று விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பிற உயிர்களையும் இயற்கைப் பொருள்களையும் தன் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி, அவற்றுக்குத் தன் வாழ்க்கையில் இடம்தந்து தன் இருப்பைப் புரிந்துகொள்வதே வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது ஆகும். இந்த வாழ்க்கை அர்த்தம் கருத்துகள், நம்பிக்கைகள், நடைமுறைகளின் மூலம் வெளிப்படும். இவற்றின் தொகுப்பையே விளக்கநிலையில் பண்பாடு என்கிறோம்.
தமிழ்ச் சமூகத்தை இந்த நோக்கில் பார்த்து அதன் தனிப் பண்புகளை – அதாவது வாழ்க்கையைப் பற்றிய அதன் தனி அர்த்தங்களை – நிறுவும் போதுதான் விளக்கநிலையில் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைப் பற்றிப் பேசமுடியும். விளக்கநிலையில் பண்பாடுகளுக்கிடையே – அர்த்தப்படுத்திக் கொண்ட வாழ்க்கைகளுக்கிடையே – உயர்வு தாழ்வு இல்லை. இந்த நோக்கில் அமெரிக்கப் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு என்ற இரண்டில் எது உயர்ந்தது என்ற கேள்வி அர்த்தமில்லாதது. இதைப்போலவே தமிழ்ச் சமூகத்தின் சங்ககாலப் பண்பாட்டையும் இக்காலப் பண்பாட்டையும் ஒப்பிட்டு உயர்வு தாழ்வு காண்பதும் தவறானது. ஒரு சமூகத்தினுடைய, ஒரு காலத்தினுடைய பண்பாட்டின் அடிப்படையில் இன்னொரு சமூகத்தினுடைய, இன்னொரு காலத்தினுடைய பண்பாட்டை எடைபோடுவது தவறாகும். ஒவ்வொரு சமூகமும் தன்னைக் காத்துக்கொள்ளும் வகையில் தன் சமகால வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்கிறது. இது பரிணாம நியதி. எனவே தான் பண்பாட்டு மாற்றம் இருக்கிறதே தவிரப் பண்பாட்டு அழிவு இல்லை என்கிறோம். ஒரு சமூகத்தினர் முற்றிலுமாக அழியும்போது, ஒரு சமூகத்தினர் தங்கள் பண்பாட்டை விட்டுவிட்டு இன்னொரு சமூகத்தினரின் பண்பாட்டை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளும்போது பண்பாட்டு அழிவு நேரலாம். ஆனால் இது அபூர்வம். மொழிக்கும் இது பொருந்தும்.
வாழ்க்கையின் அர்த்தம் – பண்பாடு – நிலையானது அல்ல. அது காலந்தோறும் மாறும். மாற்றம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் மனிதனைச் சுற்றியிருப்பவை மாறுகின்றன. அந்த மாறுதல்களோடு தன்னை இணைத்து வாழ்க்கையைப் புரிந்துகொள்வதும் மாறுகிறது. தமிழ்ப் பண்பாடு இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறவில்லை என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானது, நடக்க முடியாதது. அதே நேரத்தில் வெளிவடிவம் மாறினாலும் அடிப்படைத் தன்மை மாறாமல் இருக்கும் பண்புகளும் பண்பாட்டில் உண்டு. ஆழ்நிலையில் இருக்கும் அவற்றைக் கண்டுபிடிக்கவேண்டும்.
இந்த இரண்டின் அடிப்படையிலும் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு என்ன என்ற கேள்விக்கு விடை காண முயல வேண்டும். சங்ககால மரபுப் பண்பாடே இன்றைய தமிழ்ப் பண்பாடு என்பதும், ஏற்றுக்கொண்ட மேல்நாட்டின் புதிய பண்பாடே இன்றைய தமிழ்ப் பண்பாடு என்பதும் விடை ஆகாது. இரண்டின் ஊடாட்டத்தில் விளைந்த ஒன்றே இன்றைய தமிழ்ப் பண்பாடாக இருக்க முடியும்.
பண்பாட்டின் அடிப்படை அம்சமான மொழியைப் பற்றிய தமிழர்களின் கருத்துகளும் மேலே சொன்ன பிற பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிய அவர்களது கருத்துக்களைப் போன்றவையே. அவர்களுடைய மொழி நோக்கு, மொழியின் நடைமுறை வழக்கின் அடிப்படையில், விளக்க நிலையில் அமையாமல் மானசிகப்படுத்தப்பட்ட ஆதர்சநிலையில், விதிநிலையில் அமைந்திருக்கிறது. அமைப்பில் தமிழ் மொழி தனித்தன்மை உடையது, மற்ற மொழிகளைவிடச் சிறந்தது, இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாதது என்ற கருத்து தமிழ் சார்ந்த அறிவு ஜீவிகளால் போற்றப் படுகிறது.
ஒவ்வொரு சமூகமும் அதன் பண்பாட்டின் அடிப்படையில் சில சாதனைகள் புரிகிறது. வெவ்வேறு பண்பாடுகள் வெவ்வேறு சாதனைகள் புரியலாம். பண்பாட்டின் சாதனைகளையே நாகரிகம் என்கிறோம். சாதனைகளில் உயர்வு, தாழ்வு உண்டு, வாழ்வு தாழ்வும் உண்டு, எனவே ஒரு நாகரிகம் சிறந்த நாகரிகம் என்றோ அழிந்த நாகரிகம் என்றோ சொல்லலாம். ஒரு சமூகம் தன் பண்பாட்டின் விளைவாக எழுத்தையோ வெடி மருந்தையோ கண்டுபிடித்து அதன் மூலம் அதிகார பலம் பெற்று உயர்ந்த நாகரிகம் என்று பெயர் பெறலாம். வேறு சாதனைகளால் அதைவிட அதிகாரபலம் பெற்ற இன்னொரு நாகரிகத்தால் வெல்லப்பட்டு அழிந்த நாகரிகம் என்றும் பெயர் பெறலாம். பண்பாட்டிற்கு உயர்வோ அழிவோ இல்லை; நாகரிகத்துக்கு உண்டு. ஒருவன் பண்பாட்டை உயர்ந்தது, தாழ்ந்தது என்று வகைப்படுத்தினால் அது நாகரிகத்தை வகைப்படுத்துவதாகவே அமையும்.
தமிழ்ப் பண்பாடு கட்டடக் கலை, நுண்கலை, நீர்ப்பாசனம், கடல் வணிகம் முதலியவற்றில் முன்காலத்தில் படைத்த சாதனைகளைத் தமிழ் நாகரிகம் எனலாம். தமிழ்மொழி இலக்கியம், இலக்கணம், ஓரளவு தத்துவம் ஆகியவற்றில் படைத்த சாதனைகளும் தமிழ் நாகரிகத்தில் அடங்கும். இரு பண்பாடுகளின் ஊடாட்டத்தால் புதிய சாதனைகள் – நாகரிகங்கள் – பிறப்பதை உலக வரலாறு காட்டுகிறது. மேலே சொன்ன மொழித் துறைகளில் முக்கியமாக இலக்கணத்திலும், தத்துவத்திலும், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய வட மொழிகளின் ஊடாட்டம் தமிழ் மொழிக்குக் கிடைத்தது.
தமிழ் நாகரிகம் உயர்ந்த நாகரிகம் என்று நாம் பெருமைப்படலாம். இது தமிழ் முன்னோர்களின் பெருமை, நம் பெருமை, இதற்கு நாம் வாரிசு என்பதே. இன்றைய தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் மொழியின் சாதனை என்ன என்ற கேள்விக்கு விடை இல்லை. கலை, அறிவியல், இலக்கியம் முதலியவற்றில் இன்றைய தமிழ்ப் பண்பாட்டின், தமிழ் மொழியின் தனிப்பட்ட சாதனைகள், சிறப்பான சாதனைகள் என்று பெருமைப்பட எதுவும் இல்லை. ஆங்கிலப் பண்பாட்டின், மொழியின் ஊடாட்டம் தமிழ்ப் பண்பாட்டுக்கு, மொழிக்கு இன்று இருக்கிறது. ஆனால் இதன் விளைவாகப் புதிய சாதனைகள் எழக் காணோம். செய்தவை எல்லாம் ஆங்கிலப் பண்பாட்டினுடைய, மொழியினுடைய சாதனைகளின் நிழலாகத்தான் இருக்கின்றன. இப்படித் தமிழ் நாகரிகம் ஒடுங்கிவிட்டதற்குத் தமிழ்ப் பண்பாட்டில் ஏதாவது காரணம் இருக்கிறதா என்று பார்க்கலாம்.
பண்பாட்டைப் பற்றியும் பண்பாட்டின் சாதனமான மொழியைப் பற்றியும் தமிழர்கள் கொண்டிருக்கிற மனப்பாங்கும் கருத்துக்களும் ஒரு காரணம் ஆகலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலே சொன்னபடி, இரண்டைப் பற்றிய தமிழர்களின் மனப்பாங்கும் கருத்துகளும் ஒரே மாதிரியானவை. தமிழ்ப் பண்பாடு தூய்மையானது, இந்தத் தூய்மையைப் போற்ற வேண்டும் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் விளைவான செயல்களும் மொழிக்கும் ஏற்றப்படுகின்றன. தமிழ்மொழியைத் தமிழ்ப் பெண்ணாக உருவகிக்கும் போது அதன் கன்னித்தன்மை – இளமை, தூய்மை என்ற இரண்டு பொருளிலும் – வலியுறுத்தப்படுகிறது. கன்னித்தன்மையைக் காக்கச் சுதந்திரமான வளர்ச்சிக்குக் கட்டுப்பாடுகள் போடப்படுகின்றன. தமிழ் நாகரிகம் உயர்ந்திருந்த காலத்தில் இருந்தது போல் இன்றும் தமிழ் வீட்டு மொழியிலிருந்து நாட்டு மொழி ஆக வேண்டுமென்றால் கட்டுப்பாடுகள் துணை செய்யாது. வீட்டைவிட்டு நாட்டுக்கு உழைக்கச் செல்லும் பெண் புடவையிலேயே இருப்பாள் என்று எதிர்பார்க்க முடியாது. பழைய மரபை மேற்கோள்காட்டி நெறிப்படுத்தும் பண்புகளுக்கும் இன்றைய வாழ்க்கையின் நிர்பந்தங்களுக்கு ஏற்ப நடைமுறையில் கடைப்பிடிக்கும் பண்புகளுக்கும் இடையே இடைவெளி இருப்பதைப் போல மரபு இலக்கணங்களிலிருந்து மேற்கோள் காட்டி நெறிப்படுத்த முனையும் தமிழ் மொழிக்கும் இன்றைய தேவைகளை நிறைவு செய்யத் தேவையான தமிழ் மொழிக்கும் இடைவெளி இருக்கிறது. போற்றுவது ஒன்றும் பின்பற்றுவது ஒன்றுமாகப் பிற பண்பாட்டுக் கூறுகளில் இரட்டை நடத்தை இருப்பது போல, மொழியிலும் போற்றுவது தமிழ், பின்பற்றுவது ஆங்கிலம் என்ற நிலை இருக்கிறது. இந்த இரட்டை நடத்தையால் கலை, அறிவியல், இலக்கியம் ஆகிய எல்லாத் துறைகளிலும் படைப்பாற்றல் முழுமலர்ச்சி அடையவில்லை. நம் ஆளுமையை உருப்படுத்தும் நம் பண்பாட்டை, மொழியைச் சார்ந்து சாதனைகள் செய்ய மனம் இல்லை. வாய்ப்பு இல்லை. நாம் முழுமையாகத் தன்வயப்படுத்திக் கொள்ளாத இன்னொரு பண்பாட்டை, மொழியைச் சார்ந்து சாதனைகள் செய்ய இயலவில்லை. மீறிச் சிலர் செய்கிற சாதனைகளைப் பிறப்பால் தமிழர்களின் சாதனைகள் எனலாமே தவிர தமிழ்ப் பண்பாட்டின், மொழியின் சாதனைகள் என்று கூறுமுடியாது.
தமிழ்ப் பண்பாட்டிடம் தமிழர்களுக்கு ஒரு பக்தி இருப்பதுபோல் தமிழ் மொழியிடமும் ஒரு பக்தி இருக்கிறது. தமிழைத் தாயாக, தெய்வமாகக் கொள்வதன் விளைவு இது. பக்தி இன்னொரு படி போய்ப் பயபக்தி ஆகிறது. பயபக்தி மொழியை நம்மிடமிருந்து தூரப்படுத்துகிறது. மேலே சொன்னபடி மரபின் அடிப்படையில் மொழிக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் தூரப்படுத்துதலை உறுதி செய்கின்றன. மொழிக்கு நாம் வணங்குவதை விட மொழியை நமக்கு வளைக்க வேண்டும். மொழியைத் தூரத்தில் வைக்காமல் நெருக்கம் காட்ட வேண்டும். மொழியோடு தோழமை உறவுகொண்டு ஊடியும் கூடியும் அதன்மேல் ஆட்சி செலுத்தினாலே புதிய மொழி பிறக்கும், புதிய படைப்புகள் பிறக்கும். கலை, அறிவியல், இலக்கியப் படைப்புகளில் புதிய சாதனைகள் படைக்க மொழியிடம் உரிமை எடுத்துக் கொள்ளவேண்டும். தமிழ்ப் பண்பாட்டின், மொழியின் விளைவாகப் புதிய சாதனைகள் படைக்கும்போதுதான் புதிய தமிழ் நாகரிகம் பற்றிப் பேசலாம். அதைப்பற்றிப் பெருமைபடலாம்.
நன்றி: காலச்சுவடு 2005

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!