Sunday, April 21, 2013

2013.. இன்னமும் உறங்கியிருக்கவில்லை



2013.. இன்னமும் உறங்கியிருக்கவில்லை 



இலையுதிர்கால ஓவியர்கள் தீட்டிச்சென்ற 
ஓவியங்கள் உருவழிந்துபோன 
வரலாற்றை பனிக்கால தேவதைகள் 
நிலமெங்கும் மலையெங்கும் 
ஏன் மரமெங்கும்கூட அவசரமாய்ச் 
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 
அவர்கள் திரும்பிப் போய்விடவேண்டும். 
நதியிடம் சொல்லி 
அல்லது சொல்ல முயற்சித்து 
மறைந்துபோகின்றனர் அவர்கள். 

எனது கடந்தகாலத்தின் சிதறல்களை 
அதன் துகள்களைக்கூட இந்த நதியின் 
இரைச்சல்களிடம் வீசியெறிகிறேன். 
அது திரண்டு திரண்டு அழிகிறது. 
முகில்களின் மடியினில் கிறங்கிப்போன 
நதியைப் பெயர்த்துவிட்டு 
நான் புகுந்து, இப்போதான் 
நாளிகையாகிப் போயிருக்கலாம் 
அல்லது 
பல மணி நேரமாகவும் இருந்திருக்கலாம். 
நான் இறகாகிப் போய் 
பறவையொன்றை வெளியெங்கும் 
மிதக்கவிட்டிந்தேன். 

பின்னொருநாள் 
முகில் கோதியுதிர்த்த என்; துளிகளில் 
நனைந்து சுகம் கண்டாள் என்னவள் 
நதியிலும் விழுந்தன என் துளிகள். 
ஈரத்தின் குருத்துகளில் வழிந்த 
நிறங்களையெல்லாம் 
அவள் கூந்தலின் நுனிகள் 
எதற்காக சேர்த்து வைக்கின்றன. 

ஒருவேளை 
உருவழிந்த நம்பிக்கைகளை 
வழமைபோல் மீண்டும் 
ஓவியமாய் அவள் வரைதல்கூடும். 
அதன் தொகுப்பை 
2013 என பெயரிடவும் கூடும்.

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!