Tuesday, June 18, 2013

கிழக்கில் கண்ணகி அம்மனின் திருக்குளிர்த்தி

விபுலமாமணி. வி.ரி.சகாதேவராஜா உதவிக் கல்விப் பணிப்பாளர்
கிழக்கில் கண்ணகி அம்மனின் திருக்குளிர்த்தி சடங்கு நேற்று 28 ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியது. திருக்குளிர்த்தி 5ம் திகதி அதிகாலை பாடப்பெறும் .அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.
கிழக்கில் கண்ணகி வழிபாடு பிரசித்தமானது.இது ஒரு புராதன வழிபாடாகும். திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் வழிபாட்டில் காண்கிறோம்.
இத்தெய்வங்களில் கண்ணகை அம்மனுக்கு இலங்கையில் குறிப்பாக கிழக்கிலும் வன்னியிலும் ஆலயங்கள் அமைத்து வருடந்தோறும் பொங்கல் படைத்து குளிர்த்தி பாடி வழிபடுவதைக் காணலாம்.
பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித்தெய்யோ என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம்.
கண்டியிலுள் தலதா மாளிகையில் கண்ணகி கோயில் இருப்பதும் கயபாகு மன்னன் இந்தியாவின் சேரநாட்டிலிருந்து கொணர்ந்த சந்தனக்கட்டையாலான விக்கி;ரகமும் சிலம்பும் இன்றுமுள்ளது. ஈழத்துக் கடைசித் தமிழ் மன்னனின் தலைநகர் கண்டி என்பதுடன் அது கண்ணகி வழிபாட்டின் உறைவிடமுமாகும்.இன்று கண்டியில் நடைபெறும் பெரஹரா பத்தினித்தெய்வமாம் கண்ணகிக்கு எடுக்கப்பட்டவிழாவேயாகும் மணிமேகலை சிந்தாமணி சிலப்பதிகாரம் வளையாபதி குண்டலகேசி ஆகிய ஜம்பெரும் காப்பியங்களுள் தமிழில் உருவான முதல் பெரும் காப்பியம் சிலப்பதிகாரமாகும்.இதனை இளங்கோவடிகள் சிருஸ்ட்டித்திருந்தார். சிலப்பதிகாரம் ஒரு சர்வசமய சமரச இலக்கியமான தமிழக்காவியமாகும் .
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றுவது ஊஉம் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினைச் உருத்து வந்து ஊட்டும் என்பதும் சூழ்வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் மேற்படி மூன்றுஉண்மைகளிலும் தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டியுள்ளார்.
வேறெந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லாத வகையில் முடியுடை மூவேந்தரையும் அவர்தம் ஆளுகைக்குட்பட்ட தமிழ் நிலத்தையும் சமநோக்கோடு காண்கிறார். சங்ககாலத்திலே கன்னிப்பெண்கள் மட்டுமே காலிலே சிலம்பு அணிவது வழக்கம்.ஆனால் சற்று பின்வந்த சிலப்பதிகார காலத்திலே திருமணமான பெண்கள் சிலம்பணிந்தார்கள்.அச்சிலம்பிலே ஒரு சிலம்பு கழன்றாலோ உடைந்தாலோ கழட்டினாலோ அங்கு விபரீதம் நிகழும் என்பது நம்பிக்கை. அவ்வகையிலே கண்ணகையினதும் கோப்பெருந்தேவியினதும் ஒற்றைச்சிலம்புகளே சிலப்பதிகாரமாயின என்று கூறலாம்.
கண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது. வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள். சிறு குடியீரே சிறு குடியீரே, என்ற சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும்.அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்குவந்தது.
சேரன்செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தான்.
இந்த விழாவிற்கு குடகக்கொங்கரும் மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறிநிற்கிறது. கிழக்கின் கரிகாலன் மோனத்தவமுனி முத்தமிழ் வித்தகன் இப்புண்ணிய பூமியில் அவதரித்த ஆண்டான 1892 இல்தான் சிலப்பதிகாரமும் முதன்முதலில் அச்சிடப்பட்டது.அதன் பின்பே அதன் புகழ் கற்றவர் மத்தியில் பரம்பியது.
சிலப்பதிகாரம் மானுடப்பெண்ணை தெய்வமகளாகச்செய்து நிற்க வழக்குரைப் பனுவல் தெய்வமகளை மானுடப் பெண்ணாகக் காட்டிச் செல்கின்றது. கண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமல்ல சிங்கள இலக்கிய நூல்களும் காணப்படுகின்றன.ராஜாவலிய ராஜரத்தினாகார பத்தினிக்கத்தாவ முதலிய சிங்கள நூல்கள் அவை. வழக்குரைநூல் சிறிய மணிப்பரல் காரணமாகப் பெரிய போரினைக் கிளப்பிவிட்டுத் தமிழனைத் தமிழன் வென்ற செய்தியினை விரித்துச் செல்கின்றது.ஈழநாட்டிற்கும் சோழநாட்டிற்குமிடையே நடந்தேறிய இச் சண்டையில் திழன் தமிழனோடு சமாதானப்பட்டு வாழ்ந்த செய்தியினை ஈற்றில் நமக்குத் தெரிவித்து நம்மை மகிழ்விக்கின்றது.
வழக்குரைநூலில் வருகின்ற அணிகலன்கள் பலவற்றின் பெயர்கள் கிழக்கோடு தொடர்புடையவை.கொப்புவாழி தண்டை காலாழி பீலி உட்கட்டு மேல்வாளி கொப்புவாளி காறை கைக்கட்டு போன்ற நகைகளை அணிகின்ற வழக்கம் இன்றும் நடைமுறையிலிருக்கின்றது.
நாடுகாட்டுப் பரவணி;க் கல்வெட்டில் கண்ணகி வணக்கம் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர் சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் பத்தினி தெய்யோ என்றும் வழங்கப்பட்டுவந்தது.
சிலம்புக்காதை பற்றியபாடல்களை மட்டக்களப்பிலே கண்ணகி வழக்குரை என்றும் திருமலையிலே கோவலன் காதை என்றும் வவுனியாவிலே சிலம்பு கூறல் என்றும் பாடுவர். கிழக்கில் காலங்காலமாக வணங்கப்பட்டுவரும் காளி துர்க்கை மாரி பேச்சி முதலிய பெண் தெய்வ வழிபாடுகளில் இறுதியில் வந்து சேர்ந்த தெய்வம் கண்ணகி கண்ணகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.
இன்று வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமையாகிவிட்டது. கயவாகு காலத்தில் அதாவது கி.பி.2ம் நூற்றாண்டில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இன்று கிழக்கில் 60க்கு மேற்பட்ட கண்ணகை அம்மன் ஆலயங்கள் இருந்திற்றபோதிலும் முதல் ஆலயம் எங்கு எப்போது கட்டப்பட்டது என்பது தொடர்பில் தெளிவில்லை.
கயவாகு வேந்தனும் இலங்கையில் முதலில் எங்கு கண்ணகிக்கு கோயில் எடுப்பித்தான் என்பதில் ஜயமிருக்கிறது. அனுராதபுரத்தில் அல்லது யாழ்.கந்தரோடைக்கு அருகிலுள்ள அங்கணாமைக்கடவையில் கட்டப்பட்டது என்று ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
மதுரையை எரித்த கண்ணகி சினத்துடன் தென்பகுதியூடாக இலங்கை வந்து வன்னியின் முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை எனுமிடத்தில் குளிர்ந்து சீற்றம் தணிந்ததாக வரலாறு கூறுகிறது.
தனிப்பட்டவர்கள் கண்ணகை ஆலயங்களை சிறிய அளவில்கட்டி வழிபட்டு வந்தனர்.இதனை மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலும் சுட்டிநிற்கிறது. கண்டி அரசன் இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629-1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.அவற்றில் அங்கணாமைக்கடவை (வெளியிலிருந்தும்) முதலூராகக் குறிப்படப்பட்டுள்ளது. எனவே அதுவே முதல் ஆலயமாகக் கொள்ளலாம்.
தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் கூறப்படாத ஆறு ஊர்களின் பெயர்கள் பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் காவியத்திற் காணப்படுகின்றன. பட்டி நகர் தம்பிலுவில் வீரமுனை காரைநகர் பவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளுர் செட்டிபாளையம் புதுக்குடியிருப்பு செல்வமுறு மகிழடித்தீவு முதலைக்குடா அட்ட திக்கும் புகழும் வந்தாறுமூலை நகர் மட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே. என ஊர்சுற்றுக்காவியம் கூறுகிறது.
நாடுகாட்டுப் பரவணி;க் கல்வெட்டுக்குறிப்புகளின்படி பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் ஆலயம் 18ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 19ம் நூற்றாண்டின் முதற்கூற்றில் கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது.
கண்ணகி வணக்கம் முதலில் தனிப்பட்ட குடும்பங்களின் சொத்தாக பூசிக்கப்பட்டுவந்த போதிலும் கண்ணகையை வழிபடுவோர் தொகை அதிகமாக கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.அதற்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் படையெடுக்கத்தொடங்கினர். உதாரணமாக செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.இவ்வாலயத்தில் கிரான்குளம் களுதாவளை குருக்கள்மடம் மாங்காடு அம்பிலாந்துறை பழுகாமம் தேத்தாத்தீவு ஆகிய ஏழு ஊர்களைச்சேர்ந்தவர்களுக்கு உரிமை இருந்தது.
சடங்கு நிகழ்வுகள்
கண்ணகி மதுரையை எரித்தது கயவாகு மன்னன் பத்தினிக்கு விழா எடுத்தது சிங்கள மக்கள் பெரஹரா ஊர்வலம் நடாத்தி பத்தினியை வழிபடுவதெல்லாம் ஆடி மாதத்திலாகும். ஆனால் தமிழர்கள் இதனைத் தவிர்த்து வைகாசி மாதத்தில் கண்ணகிக்கு சடங்கு செய்துவருகின்றனர்.
வைகாசித்திங்கள் வருவேனென்று வரிசைக்கியைந்து விடைகொடுத்தாரே என குளிர்த்திப் பாடல் கூறுகிறது. இதில் வைகாசித் திங்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள்நிலவிவருகின்றன. ஓன்று வைகாசிப் பூரணையைக்குறிக்கும்.மற்றயது வைகாசிப்பூரணைக்கு அடுத்து வருகின்ற திங்களைக் குறிக்கும்.இவை சடங்குகளின் இறுதித் தினமாகக் கொள்ளப்படுகின்றன.இச்சடங்குகள் வைகாசி மாதத்தில் நடப்பதால் வைகாசிப் பொங்கல் என்றும் வைகாசிச்சடங்கு என்றும் வைகாசிக்குளுத்தி என்றும் அழைக்கப்படுவதுண்டு.
சடங்கு நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை ஊருக்கு ஊர் வேறுபடும்.சில ஊர்களில் 5 நாட்கள் சில ஊர்களில் 7 நாட்கள் இன்னும் சில ஊர்களில் 9 நாட்களும் நடைபெற்றுவருகின்றன. சடங்கின் ஆரம்பநாள் கதவுதிறத்தல் என்று கூறுவர்.மாரியம்மன் காளியம்மன் சடங்கைப் பொறுத்தவரை இது கும்பம் வைத்தல் என அழைக்கப்படும். ஆரம்பநாள் கல்யாணக்கால் வெட்டும் சடங்கு என்றும்’ கூறுவர்.
அன்று கடல்நீர் எடுத்துவரும்வழியில் ஏலவே பார்த்துவைத்திருந்த இடத்தில் பூவரசு மரம் அல்லது வேம்பு மரக்கிளையை கத்தி பாவிக்காமல்முறித்துஊர்வலமாக வந்து ஆலயத்தில் புடவைகள் சுற்றி நடப்படும்.இது பக்தியுட்டும் நிகழ்வாக சித்திரிக்ப்பட்டுள்ளது.
பின்பு பச்சைகட்டல் என்பது பாரம்பரிய நிகழ்வாகும்.மதுரையில் மாதவி வீட்டில் புகுந்த கண்ணகைக்கு சமையல் செய்து கொடுக்கப்பட்டதைக் குறிக்கும்.அன்று வழக்குரையில் அடைக்கலக்காதை பாடப்பெறும்.இக்கதையிற் கூறப்படும் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சொல்ல கட்டாடியார் அவற்றை எடுத்து அம்மன் முன் காணிக்கையாக வைப்பது இதில் முக்கிய அம்சமாகும்.
இறுதிநாள் பகலில் வழக்குரையில் கொலைக்களக்காதை பாடப்பெறும்.கோயில் சோகமயமாகவிருக்கும்.அன்று மதியச்சடங்கு நடைபெறமாட்டாது.மாலையில் வழக்குரைக் காதை பாடுவர்.இறுதியில் குளிர்த்திக் காதை பாடியபின் வைகறைப் பொழுதில் திருக்குளிர்த்தி நடைபெறும்.அதன்போது அவ்வவ் ஊர்களிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வழிபடுவது இன்றும் வழக்கிலுள்ளது.
இச்சடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் மஞ்சள் தட்டக்கூடாது மாவிடிக்கக்கூடாது புலால் உண்ணக்கூடாது இப்படி பலத்த பாரம்பரிய கட்டுப்பாடுகள் உள்ளன.அவை இன்றும் பண்பாடு ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை அம்மனிலுள்ள பயபக்தியைக் காட்டுகிறது எனலாம்.

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!