Sunday, April 21, 2013

சித்திரவதைக் கூடத்திலிருந்து


சித்திரவதைக் கூடத்திலிருந்து 
-------------------------------------------- 
அடுத்த கணம் நோக்கி 
எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர 
முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ 
ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை 

எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும் 
அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து 
தப்பிக்கொள்ள முடியவில்லை 
சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே 
எண்ணங்கள் காணாமல் போயின 

துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள் 
உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள் 
மரண ஓலங்கள் 
அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள் 
பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன 

பயங்கரத்தைத் தவிர 
இங்கிருப்பது 
மனிதத்தன்மையில் கையேதுமற்ற நிலை 
சித்திரவதைக் கூடத்தில் சந்திக்கக் கிடைக்கும் 
ஒரே அன்பான தோழன் 
மரணமே 
அவனும் 
எங்களது வேண்டுகோளை உதாசீனப்படுத்துகிறான் 

நேற்றிரவு கொண்டு வரப்பட்ட யுவதியின் 
குரல் படிப்படியாகத் தேய்ந்தழிகிறது 

சேவல் கூவ முன்பு 
மூன்றாவது முறையாகவும் 
எவரையும் தெரியாதெனச் சொன்ன சகோதரி 
காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக 
அச்சம் தரும் மரணத்தையும் 
கெஞ்சுதலுக்குப் பதிலாக 
சாபமிடுவதையும் தேர்ந்தெடுத்த சகோதரி 
எனதிரு கண்களையும் கட்டியிருக்கும் துணித் துண்டு ஈர்த்தெடுத்த 
இறுதிக் கண்ணீர்த் துளிகளை 
சமர்ப்பித்தது உன்னிடமே 
உற்சாகமூட்டும் மேலதிகக் கொடுப்பனவு 
பகலுணவிற்காகக் கிடைத்த யோகட் கோப்பையின் 
அடிவரையில் நக்கிச் சுவைத்த படைவீரன் 
அதை எரிந்து மிதிக்கிறான் 
அடுத்தது யார் 

இங்கு வாழ்க்கை இதுதான் 
இங்கு மரணம் எது? 
முகமொன்றற்ற பிணமொன்று மற்றும் 
தலைப்பொன்ற செய்தியொன்று மட்டும் 

பட்டியலிடப்படாத வாழ்க்கை 
பட்டியலிடப்படாத மரணத்தோடு 
வந்து சேர்கிறது 

பைத்தியக் கனவுகளோடு 
நான் எத்தனை தடவை இங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறேன் 
எனினும் நான் இங்கேயேதான் 
இந்தத் தெளிவு கூட 
கண்டிப்பாகப் பயங்கரமானது 

இங்கு படுகொலை செய்யப்பட்ட 
அனேகருக்கு 
மனித முகமொன்று இருந்தது 
எனது இறுதிச் சாட்சியாக 
எனக்குச் சொல்ல இருப்பது அது மட்டுமே

No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!